பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/136

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

127



607. இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட வுஞற்றி லவர்.

(இ-ரை.) மடி புரிந்து மாண்ட உஞற்று இலவர் - சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சி ஒன்றும் மேற்கொள்ளாத அரசர்; இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் - அமைச்சர் கண்டித்து அறிவுரை கூறியும் அதைக் கேளாமையாற் பின்பு அவர் இகழ்ந்து கூறும் சொல்லைக் கேட்பர்.

சிறந்த முயற்சியே யன்றிச் சிறு முயற்சி பயன்படாதென்பார் 'மாண்ட உஞற்று' என்றார்.

இடி என்பது முதனிலைத் தொழிற்பெயர். 'புரிதல்' இரண்டனுள், முன்னது செய்தல்; பின்னது விரும்புதல். தன்னிடத்திற் குற்றமுண்மையால் எதிர்த்துப் பேச வாயின்மைபற்றி, 'எள்ளுஞ்சொற் கேட்பர்' என்பர். எள்ளுதல் உள்ளத் தொழிலேயாயினும், 'எள்ளுஞ்சொல்’ என்றமையால் இங்கு இகழ்தலாகிய வாய்த்தொழிலைக் குறித்தது. சோம்பலால் உயர்வை யிழத்தலோடு இகழ்ச்சிச்சொற் கேட்கும் இழிவையும் அடைவர் என்பது இங்குக் கூறப்பட்டது.

"அறிகொன் றறியா னெனினு முறுதி யுழையிருந்தான் கூறல் கடன்." (குறள்.638)

ஆதலின், “இடி’யென்னும் முதனிலைத் தொழிற்பெயரான், நட்டா ரென்பது பெற்றாம்" என்னும் பரிமேலழகர் சிறப்புரைக் குறிப்புப் பொருந்துவதன்றாம். அவர் கருத்துப்படி, கழறுதலைச் செய்வாரெல்லாம் நட்டாரே யெனின், அது அமைச்சர் இன்மையையோ அவர் கடமை தவறுதலையோ உணர்த்துதல் காண்க.

608. மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் னொன்னார்க் கடிமை புகுத்தி விடும்.

(இ-ரை.) மடிமை குடிமைக்கண் தங்கின் - சோம்பல் தன்மை குடி செய்வானிடம் அமையின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும் - அது அவனைத் தன் பகைவர்க்கு அடிமையாக்கி விடும்.

மடிமை என்றது இங்கு அதன் விளைவாகிய கருமக்கேட்டை. குடிமை குடிசெய்யுந் தன்மை. அது இங்கு அதனையுடைய அரசனைக் குறித்தமை. ‘தன்னொன்னார்க்கு' என்பதனால் அறியப்படும். குடிசெய்தல் தன் குடியைச்