பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/140

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

131



டன்மையை விரும்பும் ஆண் பேடி. இப் பாகுபாடு பாலுறவுபற்றியதே யன்றிப் போர்மறம் பற்றிய தன்று. பேடியருள் போர்மறம் உள்ளவரும் உளர்; இல்லாதவரும் உளர். இங்குக் குறிக்கப்பட்ட பேடி அஃதில்லாத வகையென அறிக. பேடிக்கு வாளைப் போரிலாள விருப்ப மிருப்பினும் அச்சத்தாற் கூடாமை போல, விடாமுயற்சி யில்லானுக்கு வேளாண்மைமேல் விருப்பிருப்பினும் வறுமையாற் கூடாதென்பதை யுணர்த்தற்கு, இல்லை யென்னாது 'கெடும்' என்றார்.

615. இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர் துன்பந் துடைத்தூன்றுந் தூண்.

(இ-ரை,) இன்பம் விழையான் வினை விழைவான் - தனக்கு இன்பத்தை விரும்பாதவனாய் வினைமுடித்தலையே விரும்புகின்றவன்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - தன் சுற்றமாகிய பொறையின் (பாரத்தின்) வறுமையைப் போக்கி அதைத் தாங்கும் தூணாவன்.

விடாமுயற்சியுடையான் மெய்வருத்தம் பாரானாதலின் 'இன்பம் விழையான்' என்றும், தன்னலங் கருதாது முயற்சியால் வினைமுடித்துப் பெரும் பொருள் பெற்றவன் தன் கிளைஞரைப் பேணுவானாதலின், 'தன்கேளிர்.... தூண்' என்றும் கூறினார்.

"மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார்.” (நீதிநெறி.53)

"செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்” (வெற்றி.3)

என்பதால், கிளைஞரைத் தூண்போல் தாங்குதல் செல்வர் கடமையென்பது பெறப்படும். 'துடைத்து' என்பது வறுமையை அறவே நீக்குதலையும், 'ஊன்றுந் தூண்' என்பது நிலையாகத் தாங்குதலையும் குறிக்கும். இல்லறத் தான் ஓம்பவேண்டிய ஐம்புலத்துள் ஒக்கலும் ஒன்றாதல் காண்க (குறள். 43). கேளிரைப் பொறையாக வுருவகியாமையால் இதில் வந்துள்ள அணி ஒருமருங் குருவகம்.

616. முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை யின்மை புகுத்தி விடும்.