பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/148

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

139



630. இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன் னொன்னார் விழையுஞ் சிறப்பு.

(இ-ரை.) இன்னாமை இன்பம் எனக்கொளின் - ஒருவன் தன் வினை முயற்சியால் வருந் துன்பத்தைத் தனக்கு இன்பமாகக் கருதுவானாயின்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் அவன் பகைவரும் அதனை விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

இறைவனால் தடுக்கப்படாத எல்லா வினைக்கும் துன்பம் ஒன்றே தடையாதலின், அத் துன்பத்தை இன்பமாகக் கொள்பவன் தொடங்கிய வினையெல்லாம் வெற்றியாக முடியும் என்பது கருத்து. ஒன்னார் விழைதலாவது பாராட்டிப் பகை தீர்தல். 'கொளின்' என்பது கொள்வதன் அருமை யுணர்த்திநின்றது. துன்பத்தை இன்பமாகக் கொள்வது ஓகத்தால் ஓதி (ஞானம்) பெற்ற துறவியர் இயல்பாதலின், அவ் வுயர்நிலை யடைந்தமைபற்றி 'ஒன்னார் விழையுஞ் சிறப்பு' உண்டாகும் எனினுமாம்.

அரசியல் முற்றிற்று.