86
உலக
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
எ-டு : ஓர் ஆள் வருகிறார் - உயர்வுப்பன்மை (பாலறியாவிடம்)
ஓர் ஆள் வருகிறான் - ஆண்பால்
ஓர் ஆள் வருகிறாள் - பெண்பால்
ஓர் ஆள் வருகிறார் - உயர்வுப்பன்மை
-பாலறிந்தவிடம்
குறிப்பு : ஓர் ஆள் வருகிறது என ஒன்றன்பால் வினைகொண்டு முடிப்பதே வழக்காயினும், ஆண்பிள்ளையாள் பெண்பிள்ளையாள் என்னும் உலகவழக்குண்மையாலும், பகுத்தறிவுள்ள பெரிய ஆளை அஃறிணைச் சொல்லாற் கூறுவது பொருந்தாமையாலும், அது வழுவென்று விலக்கப்படும்.
முறைப்பெயர்கள் முடிபு
முறைப்பெயர்கள், ஆண்பால் அல்லது பெண்பால் ஈறு கொண்டிருந்தால் அதற்கேற்ற முடிபும், உயர்வுப்பன்மை வடிவும் விளிவேற்றுமை வடிவங் கொண்டிருந்தால் உயர்வுப்பன்மை முடிபும், கொள்ளும்.
எ-டு : அப்பன் (ஐயன்) வந்தான்.
அப்பனார் (ஐயனார்) வந்தார்.
(அப்பா (ஐயா) வந்தார், வந்தார்கள்) அம்மை வந்தாள்.
அம்மையார் வந்தார்.
(அம்மா வந்தார், வந்தார்கள்)
குறிப்பு : அப்பா ஐயா அம்மா என்னும் விளிவேற்றுமை வடிவுகளை முதல் வேற்றுமையாக வழங்குவது இன்று பெருவழக் காயினும், அது இலக்கண நடைக்கேற்காது. ஆதலின், இலக்கியக் கட்டுரைகளில் அதை விலக்கல் வேண்டும்.
அம்மா வருகிறது என்னும் அஃறிணை முடிபு முற்றும் வழுவாம். அம்மாள் என விளிவேற்றுமை வடிவொடு பெண்பால் விகுதி சேர்ப்பதும், அப்பார் ஐயார் அண்ணா என அவ்வடி வொடு உயர்வுப் பன்மையீறு சேர்ப்பதும், வழுவே.
திரிபாற்பெயர் முடிபு
பெண்டன்மை கொண்ட ஆடவனைக் குறிக்கும் பேடி என்னும் பெயரும், ஆண்டன்மை கொண்ட பெண்டைக் குறிக்கும் பேடன் என்னும் பெயரும், ஆண்டன்மையும் பெண்டன்மையும் அற்ற ஆணையும் பெண்ணையும் பொதுவாகக் குறிக்கும் பேடு என்னும் பெயரும், ஆணும் பெண்ணுமல்லாத மக்கட் பிறவியைக் குறிக்கும் அலி என்னும் பெயரும், திரிபாற் பெயர்களாம். இவை பின் வருமாறு முடிபு கொள்ளும்.