பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ்ப் பண்பாடு

66

வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற் றாகும்.'

173

என்று தொல்காப்பியம் வெட்சித் திணையிலக்கணம் கூறுதல் காண்க. (புறம்.2). "நோயின்றுய்த்தல்” (ஆக்களைச் சேதமின்றி ஓட்டிக் கொண்டு வரல் என்னும் வெட்சித் துறையும் இதை வலியுறுத்தும்). 'பாதீடு' என்னும் துறை, படைத்தலைவன் கட்டளைப்படி மறவர் ஆக்களைத் தமக்குட் பகுத்துக் காத்தலைக் குறிக்கும். பாதுகாத்தல் என்னும் சொல் இதினின்றே தோன்றிற்று. பாது பங்கு.

குறித்த இடத்தில் போர் தொடங்குமுன், அக்கம் பக்கத்துள்ள தனிப்பட்ட ஆக்களையும் ஆவைப்போல் அமைந்த இயல்புள்ள அறிஞரையும், பெண்டிரையும் நோயாளிகளையும் பிள்ளை பெறாத மகளிரையும், அவ்விடத்தை விட்டகன்று பாதுகாப்பான இடத்திற் சேர்ந்துகொள்ளுமாறு முன்னறிவிப்பது மரபு.

'ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅதீரும்

எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்”

என்று புறநானூற்றுச் செய்யுள் (9) கூறுதல் காண்க. பார்ப்பார் என்பது, ஆரியர் வருமுன் தமிழ்ப் பார்ப்பனரையும், அவர் வந்தபின் பிராமணரையும், குறித்தது.

எளிய படைக்கலமுள்ளவன், கீழே விழுந்தவன், முடிகுலைந் தவன், தோற்றோடுகின்றவன் ஆகியோர் மீது படைக்கலத்தை ஏவாமையும், இரவில் போரை நிறுத்துதலும், பாசறை புகுந்து பகைவரைத் தாக்காமையும், தோற்ற அரசனைக் கொல்லாது திறை செலுத்தச் செய்தலும், இயலுமாயின் அவனொடு மணவுறவு கொள்ளுதலும், பிற போரறங்களாம்.

அக்காலத்திற் படைத்தலைவர் போன்றே அரசரும் போர்க்குச் சென்றனர். இது அவர் பொறுப்புணர்ச்சியையும் மறத்தையும் காட்டும்.

போரில் முதுகிற் புண்பட்டபோதும், வாழ்க்கையில் தன்மானங் கெட ஏதேனும் நேர்ந்த போதும், அரசர் வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தனர். இது வடக்கிருத்தல் எனப்படும். சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானொடு பொருதுபட்ட புறப்புண் நாணியும், கோப்பெருஞ் சோழன் தன் மக்கள் தன்னொடு பொரவந்த நிகழ்ச்சிபற்றிய அகப்புண்ணாலும் வடக்கிருந்தனர்.