என் அண்ணாமலை நகர் வாழ்க்கை
57
பேராசிரியர் சேது இலக்கணப் புலமையில்லாதவர்; இலக்கியப் புலமையும் பெரும்பாலும் பதவிக்கு வந்தபின் பெற்றவர். தனித்தமிழ்க் கொள்கையற்றவர்; வழக்கறிஞர்.
பேராசிரியர் தெ.பொ.மீ.சென்னைவாணர்; சென்னைத் தமிழையன்றிப் பாண்டிநாட்டுத் தமிழை யறியாதவர்; வேதாந்தியர்;(இரண்டன்மைக் கொள்கை யர்); வையாபுரி வழியினர்; வழக்கறிஞர்; பேராயக்கட்சியர்; தமிழாராய்ச்சி நிரம்பாதவர்; சமற்கிருதத்தைத் தலைமையாகக் கொண்டவர்; (ஆயினும் பேராசிரியர் சேதுபோலாது தம் கொள்கையை வெளிப்படையாய்க் கூறுபவர். திரு.வையாபுரி போன்றே பெரும்புலமை பெற்றவர். தனித்தமிழ்க் கொள்கையும் குமரித் தமிழ் நம்பிக்கையும் அற்றவர். குழுவாருள் தமிழ்ப் பற்றுள்ள பிற உறுப்பினரோ,பெரும்பதவியும் செல்வாக்கு முள்ள பிராமணரையும் சமற்கிருதப் பேராசிரியரையும் காணின், விண்பட்ட கொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலக்கின்றவர். ஓரிருவர் அங்குமிங்கும் சாரும் இருதலைமணியார்; எதற்கிணங்கியும் பதவியை இறுகப் பற்றிக்கொள்பவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக அதிகாரிகளோ அரசியலாரைத் தழுவியும் வருவாயைக் கவனித்தும் ஒழுக வேண்டியவர்.
இந்நிலையில் அண்ணாமலைநகர் செல்வதா இல்லையா என்று மீண்டும் சூழ்வு பிறந்தது. என் நண்பரெலாம் செல்லவே தூண்டினர். எனக்கு அகவை அன்று 54. "அடுத்த ஆண்டு ஓய்வு பெறும் அகவை. அதற்குமேல் ஓராண்டு நீடிப்புக் கிடைக்கலாம். ஆகவே, ஈராண்டிற்குமேல் இச் சேலங் கல்லூரியில் இருத்தல் இயலாது. அண்ணாமலை செல்லின் ஐந்தாண்டேனும் ஈராண்டேனும் அலுவலிருக்கும்.அதற்குள் தமிழ் வேர்ச்சொல் அகரமுதலியையும் ஒருவாறு தொகுத்துவிடலாம். அதன்பின் வேலை இருப்பினும் சரி, இல்லாவிடினும் சரி என்றிவ்வாறு எண்ணிச் செல்லவே துணிந்தேன். என் உண்மை நண்பரும் “நீங்கள் திராவிட மொழியாராய்ச்சிக் குழுவில் செயலாளராக விருப்பதால், டர்ப்பாடுகள் நேரினும் எதிர்த்துக்கொண்டு சமாளிக்கலாம்” என்று ஊக்கினர்.
பணிசெயற்படலம் பணிசெயற் படலம் முதற் பகுதி
முதற்பகுதி
நான் சேலங் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவனும் பேராசிரியனுமா யிருந்த பொழுது, 1956ஆம் ஆண்டு 6ஆம் மாத இறுதியில், 26-6-1956 என்னும் பக்கல் (தேதி) இட்டு அண்ணாமலை பல்கலைக்கழகப் பதிவாளர் திரு. மீனாட்சிசுந்தரனாரிடமிருந்து எனக்கு வந்த அமர்த்தோலையில், பல்கலைக்கழக ஆசிரிய வூதியம்பற்றிய நெறிகட்கு உட்பட்டு, 270-25-500 உருபா என்னும் சம்பளத் திட்டத்தில் மாதத்திற்கு 250 உருபாவும் அரசியலார் விழுக்காட்டுப்படி அருந்தற்படியும் பெறுமாறு, ஓராண்டிற்கு நான் ஆய்வு நிலையில் அமர்த்தப் பட்டிருப்பதாகவும், தமிழாராய்ச்சித்துறைத் தலைவரிடம் சென்று வேலையை ஒப்புக்கொள்ளும்படியும் குறித்திருந்தது.