பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

துறைக்கு, அதன்பின் கொண்டான்மார் சூழ்ச்சியால் புகுத்தப்பட்டது பொது ஆராய்ச்சித் துறை. அதற்கும் மொழிநூல் துறைக்கும் யாதொரு தொடர்புமின்று. பேரா. கோ. சுப்பிரமணியனாரும் மொழிநூலறிஞ ரல்லர். என்னைப்பற்றிப் பேராசிரியரும் பெருமக்களும் பலர் பரிந்துரைத்திருந்ததினால், அரசவயவர் முத்தையா அவர்கட்கும் என்னை உடனே விலக்க விருப்பமில்லை. பேராசிரியரும் தனித்துறைத் தலைவரும் தவிரப் பிறரெல்லாம் ஒரு பேராசிரியரின் கீழேயே இருத்தல்வேண்டுமென்பது பல்கலைக்கழக ஒழுங்கு. எனக்கொரு தனித்துறை யின்மையால், எழுத்துப்போக்குவரத்து வாயிற்காக வேனும் ஒரு பேராசிரியரின் கீழ் அமர்தல் வேண்டும். நான் சேரக்கூடிய துறை தமிழாராய்ச்சி பொதுத்துறை ஒன்றே. ஆதலால் அதில் சேர்க்கப்பட்டேன். ஆயினும் என் நிலைமை துணைக் கண்காணகரும் இணைக் கண்காணகருமே கண்காணகருமே கவனிக்கத் தக்கவாறு தனிப்பட்டிருந்ததினால் பேரா. கோ. சுப்பிரமணியனார் நான் விரும்பியவாறு ஏந்து (வசதி) செய்துதர இயலாது போயிற்று. மேலதிகாரிகள் ஏவினாலொழிய எனக்கென்று ஒரு தனி ஏற்பாடு செய்து தரும் அதிகாரம் அவரிடத்தில்லை. நான் பொதுத்துறையிலிருந்து, ஓர் அரசியல் தூதன் அயல் நாட்டிலிருந்தது போன்றே.

நான் மொழிநூல் துறையினின்று விலக்கப்பட்டதிற்குக் கொண்டான்மார் சூழ்ச்சியே கரணியமாயினும், என் தகுதியின்மையோ ஆராய்ச்சித் தவறோ கரணியமென்று அதிகாரிகட்கும் பிற துறையினர்க்கும் மாணவர்க்கும் பொதுமக்கட்கும் தோன்றுமாதலால், அத் தவற்றெண்ணத்தை நீக்குதற்கு, துணைக் கண்காணகரிடம் சென்று, தமிழ்நாட்டுத் தமிழ்ப் பேராசிரியர் மாநாடொன்று கூட்டவேண்டு மென்றும், அதில் என் எதிரிகளும் நானும் அவரவர் மொழிநூற் கொள்கையை எடுத்துக்கூற வேண்டுமென்றும், மாநாட்டின் பெரும்பான்மைத் தீர்ப்பை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும், எனது கொள்கை தவறென்று தீர்க்கப்படின் உடனே வேலையை விட்டுவிடுகிறேன் என்றும் சொன்னேன். அதற்கு அவர்கள் "அதென்ன, வழியிற் போவாரையெல்லாம் கூப்பிட்டுக் கேட்கிறது?” என்று விடையிறுத்துவிட்டார்கள்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை பெறவேண்டினும் நிலைக்க வேண்டினும், முதலாவது இணைக் கண்காணகர் இசைவு வேண்டும்; இரண்டாவது, துணைக் கண்காணகர் கண்ணோட்டம் வேண்டும்; மூன்றாவது, இரு பேராசிரியரின் நல்லெண்ணம் வேண்டும்; நான்காவது, பிராமண ஆசிரியரின் வெறுப்பின்மை வேண்டும்; ஐந்தாவது, ஆளுங் கட்சியைத் தாக்காதிருத்தல் வேண்டும்; இவ் வைந்தனுள்ளும் முதலது ஒன்றிருந்தாலும் போதும்; ஆயின் பல்கலைக்கழக வருமானம் குன்றாதிருத்தல் வேண்டும். ஆங்கில ஆட்சி நீங்கிய பின், ஆரியப் பேய் மீண்டும் தலைவிரித்தாடுகின்றது. ஆரியத்திற்கு மாறாய்த் தமிழை வளர்ப்பின், நடுவணரசு நல்கை (Central Govt. Grant) அடியோடு நீங்காவிடினும் அடிமட்டத்திற்கு வந்துவிடும். ஆரியத்தை வளர்ப்பதற்கே பல்கலைக்கழக நல்கைக் குழுவும் (U.G.C.) சமற்கிருதக் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாட்சியும் அத்திட்டத்தைச் சேர்ந்ததே. அதனால்,