எகர ஒகர இயற்கை
127
வடநாட்டார் இட்ட குறிகளை அவ்வாறே தமிழிலும் நெடிலுக்கு மேற் கொண்டு, அந் நாட்டாரால் வழங்கப்படாத குறிலையுணர்த்த வேறு குறிகளை அமைக்க வேண்டி வந்தது போலும். புள்ளியினால் மாத்திரைக் குறைவை அறிவித்தலைப் பிற புள்ளியிட்ட எழுத்துகளால் அறியலாம். அதைப் போலவே எகர ஒகரங்களின் திறத்திலும் நெடிலினின்றும் குறைந்த குறிலை உணர்த்தப் புள்ளியிட்டனர் என்றே கொள்ள வேண்டும்” என்று திரு. தி. நா. சுப்பிரமணியனார் தம் “பண்டைத் தமிழ் எழுத்துகள்” என்னும் சுவடியில் (பக். 86-7) வரைந்துள்ளார்.
இலக்கண நூலார் எழுத்துகளின் வரிவடிவுகளைக் குறிப்பதேயன்றி, அவற்றை வரணிக்கும் வழக்கம் எங்குமில்லை; அவற்றை வரணிக்கவும் முடியாது. டகர பகரம் போன்ற இரண்டொரு நேர்கோட்டு வரிவடிவுகளை மட்டும் ஓரளவு வண்ணிக்கலாம். ஆயின், அதனாற் பெறும் பயனில்லை. எழுத்துகளை எழுதுதலே, அவற்றின் வரிவடிவைக் காட்டுதலன்றி வேறாகாது.
புள்ளியென்பது எழுத்துகளின் வேறுபாட்டுக் குறியேயன்றி உண்மையான வரிவடிவாகாது. இதை யுணராது, பெரும்புலவரும் சிறந்த உரையாசிரியருமான நச்சினார்க்கினியரும், மகர வடிவைப்பற்றி வழுப்பட வுரைத்துவிட்டார்.
‘உட்பெறு புள்ளி யுருவா கும்மே”
(தொல். எழுத்து. 14)
மகர வரிவடிவின் அடைப்புள்ளிட்ட புள்ளி, மகரக் குறுக்கத்தின் வடிவாம் என்பதே இதன் பொருள்.
மகரக் குறுக்க வடிவு, தெலுங்கு கன்னட வண்ணமாலைகளில் இரண்டாம் டகரத்திற்குள்ள வரிவடிவை ஒருபுடை யொத்தது. தமிழ் மகர வடிவு இன்று போன்றே அன்றும் இருந்தது. மேற்குறித்த நூற்பா மகரக் குறுக்க வரிவடிவு பற்றியதேயன்றி, மகர வரிவடிவு பற்றியதன்று. அதைப் பிறழவுணர்ந்து, பகர வரிவடி வுள்ளிட்ட புள்ளியே மகர வரிவடிவம் என்று உரைத்ததொடு, அதை வரைந்தும் காட்டிவிட்டார் நச்சினார்க்கினியர். அவர் உரை வருமாறு:-
‘உட்பெறு புள்ளி யுருவா கும்மே."
(நூற்பா)
இது பகரத்தோடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்கின்றது. மகரம் அதிகாரப்பட்டு நிற்றலின் ஈண்டுக் கூறினார்.
இதன் பொருள்: உட்பெறுபுள்ளி-புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி, உருவாகும்-மகரத்திற்கு வடிவாம் என்றவாறு.
எனவே, புறத்துப் பெறும் புள்ளியாவது மேற்சூத்திரத்தான் மெய் கட்குக் கூறும் புள்ளி. ஈண்டு உருவென்றது காட்சிப் பொருளை உணர்த்தி நின்றது.
“உதாரணம்: கப்பி கப்பி (கம்மி) என வரும் இஃது எதிரது போற்றல்."