12)
குலப்பட்ட வரலாறு
பட்டம் என்னும் சொல் வரலாறு
பட்டுதல் = அடித்தல், தட்டுதல். பட்டடை = சுத்தியலால் அல்லது சமட்டியால் தட்டுவதற்கு அடையான கல் அல்லது இரும்பு.
பட்டறை = கொல்லரும், தட்டாரும் தட்டி வேலை செய்யும் அறை. பட்டசாலை = அங்ஙனம் தட்டி வேலை செய்யும் கூடம்.
பட்டு - பட்டம் = தட்டையாகத் தட்டி அடிக்கப்பட்ட தகடு. பட்டை = தகடு. தட்டையான மரவுரி, அது போன்ற பூச்சு.
பட்டம்
பட்டை
-
வ.பட்ட
பட்டையம்
—
பட்டு
பட்டயம் = ஆவணம் பொறிக்கும் தகடு.
பட்டங் கட்டுதல் என்னும் வழக்கு
ஊர்த் தலைவர்க்கு, அவர் பதவி குறித்த பெயர் பொறித்த தகட்டை நெற்றியிற் கட்டுவதே பட்டங் கட்டுதல் எனப்பட்டது. அதனால், ஊர்த் தலைவனைக் குறிக்கும் பெயர்களுள் பட்டக்காரன் என்பதும் ஒன்று.
எ-டு: பழைய கோட்டைப் பட்டக்காரர்.
மக்கள் தலைவர் கிழவன்; வேள், மன்னன், கோ, வேந்தன், மாவேந்தன் எனப் பலதிறத்தார்.
ஊராளி, நாடன், நாடான், நாட்டாண்மைக்காரன், நாட்டான், நாடாளி, குடும்பன், பண்ணையாடி, மூப்பன், அம்பலகாரன், கவுண்டன், தலைவன், சேர்வை, சேர்வைக்காரன், பட்டக்காரன், பெரிய தனக்காரன், தேவன், மன்றாடி, மந்திரி என்பன ஊர்த் தலைவனை அல்லது நாட்டுத் தலைவனைக் குறிக்கும் பெயர்கள்.
பலவூர் சேர்ந்தது நாடு. ஒன்றுக்கு மேற்பட்டவை பல. பண்டைக் காலத்தில் முல்லைநிலத் தலைவன் குறும்பொறை நாடன் எனப்பட்டான்.
வேந்தன், மாவேந்தன் ஆகிய இருவர்க்கே முடிசூடும் உரிமையுண்டு. ஏனைத் தலைவர்க்கெல்லாம் பட்டங் கட்டுவதே பண்டை வழக்கம்.
பாண்டியன், சோழன், சேரன் என வேந்தர் மூவர், அவர் வலிமை யிழந்த பிற்காலத்தில், முடி சூடும் உரிமை ஐவகை யரசர்க்கும் பொது வாயிற்று.