40
செந்தமிழ்ச் சிறப்பு கூறிப் போந்தார். இக் கருத்திற்கு இயல்பாய்ப் பொருளுணர்த்தும் சொல் இயற்சொல், அவ்வாறு பொருளுணர்த்தும் தன்மையினின்று திரிந்த சொல் திரிசொல் என்பன பொருளாம் ஆயின்,
“கிள்ளை. மஞ்ஞை என்னும் தொடக்கத்தன ஒரு கூறு நிற்ப ஒரு கூறு திரிந்தன. உந்தி, அடுக்கல் என்னுந் தொடக்கத்தன முழுவதூஉம் வேறுபடத் திரிந்தன என்று இளம்பூரணரும்,
"திரிசொல்லது திரிவாவது உறுப்புத் திரிதலும் முழுவதுந் திரிதலுமான இருவகைத்து, கிள்ளை. மஞ்ஞை என்பன உறுப்புத் திரிந்தன; விலங்கல், விண்டு என்பன முழுதுந் திரிந்தன.” என்று சேனாவரையரும்,
"அவ் வியற் சொல்லைத் திரிக்குங்கால் தம் எழுத்துச் சிறிது நிற்பத் திரிப்பனவும் அவ் வியற்சொற்றம்மையே பிறசொற் கொணர்ந்து முழுவதூஉந் திரிப்பனவும் என இரு வகையவாம்” என்று நச்சினார்க் கினியரும்,
'இவ்வாறு திரிந்து வருதலிற் றிரிசொல்லாயிற்று” என்று தெய்வச் சிலையாரும், உரைத்திருப்பதினின்று இயற்சொல் என்பது முந்துநிலைச் சொல் (Primitive) என்றும், திரிசொல் என்பது அதனின்று திரிக்கப்பட்ட சொல் (Derivative) என்றும், முதற்கண் பொருள்பட்டிருக்கலா மென்று உய்த்துணரற் கிடமுண்மை காண்க.
திசைச்சொல் என்பது கொடுந்தமிழ்ச் சொல். கொடுந்தமிழ் நாடு செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த அல்லது சூழ்ந்த பன்னிரண்டெனத் தொல் காப்பியர் தொகை குறித்தனரேயன்றி அவற்றின் பெயர் கூறிற்றிலர். உரையாசிரியர் பெரும்பாலும் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராதலின், அவருட் பலர் தொல்காப்பியர் கருத்தையும் பண்டைத் தமிழக எல்லை யையும் உணராது, தங்காலத்திற் கேற்ப,
"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன:
1. பொதுங்கர் (பொங்கர்)
2. தென்பாண்டி
3. ஒளி
4. குட்டம்
5. பன்றி
6. கற்கா
என இவை” என்றுரைப்பர்.
7. சீதம் 8. பூழி
9. மலை (மலையமான்)
10. அருவா
11. அருவா வடதலை 12. குடம்
இவற்றைச் செந்தமிழ் நாட்டுத் தென்கீழ்பால் முதலாக வடகீழிறுதியாக எண்ணிக்கொள்ளச் சொல்வர் சேனாவரையரும் நச்சினார்க் கினியரும்.
பிற்காலத்தார், பொதுங்கர், ஒளி என்னும் இரண்டை நீக்கி அவற்றுக்குப் பதிலாக வேண், சோழம் என்னும் இரண்டைச் சேர்ப்பர்.