46
கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
பெயர்களின் இகர விகுதி பெண்பால் விகுதியாயிராது எழுவாய் விகுதியாயிருப்பின், சிலவிடத்து உயர்திணை ஒருமைப்பால்கள் இரண்டிற்கும், சிலவிடத்து இருதிணை ஒருமைப் பால்கள் மூன்றிற்கும் பொதுவாம்.
உ-ம்: விறகுவெட்டி வந்தான், வந்தாள்
கண்ணிலி வந்தான், வந்தாள், வந்தது.
பேதை என்னும் பெயர், ஆண் பெண் என்னும் இருபாற்கும் பொதுவாம்.
உ-ம்: இவன், இவள் - ஓர் பேதை (அறிவிலி)
வேறு, இல்லை என்னும் குறிப்பு வினைமுற்றுகள் ஐம்பால் மூவிடம் ஈரெண்ணிற்கும் பொதுவாம்.
உண்டு (உள் + து ) என்னும் ஒன்றன்பாற் குறிப்புவினைமுற்றும் அல்ல என்னும் பலவின்பாற் குறிப்புவினைமுற்றும், ஐம்பால் மூவிட ஈரெண் பொது வினைகளாக வழங்கி வருவது வழுவமைதி யாகும்.
யார் என்னும் வினாப்பெயர் உயர்திணை முப்பாற்கும் பொது.
உ-ம்: அவன், அவள், அவர் – யார்?
என் (எவன்) அல்லது என்னை என்னும் வினாச்சொல் அஃறிணை யிருபாற்கும் பொது.
உ-ம்: அது, அவை என் (எவன்)? என்னை?
என் என்பது ஒருமையில் என்னது என்றும், பன்மையில் என்ன அல்லது என்னவை என்றும் இருக்கும். என்ன என்பது ஒருமையில் வழங்குவது வழுவமைதி.
வ
குலப்பெயர்களைத் தனித்தனி கூறும்போது, ஆண்பால், பலர்பால், பால்பகா அஃறிணை என்ற மூன்று பாலிலும் கூறலாம்.
உ-ம்: வேளாளன், வேளாளர், வேளாண்.
உயர்திணை எழுவாயும் அஃறிணை எழுவாயும் சேர்ந்து, ஒரு முடிபு கொள்ளும் போது, உயர்திணை வினைகொண்டு முடியும்.
உ-ம்: இராமனும் நாயும் வந்தார்கள்.
உயர்திணை எழுவாய் இழிவு பற்றியதாயின், இருதிணை எழுவாய்களும் ஒரு முடிபு கொள்ளும்போது அஃறிணை வினைகொண்டு முடியும்
உ-ம்: பேதையும் நாயும் வந்தன.
வெவ்வேறு சிறப்பு வினைகட்குரிய பல பொருள்களின் பெயர்கள், தனித்தனியாகவேனும் தொகுதியாகவேனும் கூறப்பட்டு ஒரு வினை கொண்டு முடியின், பொது வினைகொண்டு முடியும்.
உ-ம்: பாலும் சோறும் பலகாரமும் தேனும் உண்டார்கள்.
நால்வகை யுண்டியும் உண்டார்கள்.
பாலும் சோறும் தின்றார்கள் (அல்லது பருகினார்கள்) என்பது தவறு.