பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இனஇழிபு

முதல் நிலை : பார்ப்பாரும் அந்தணரும் (ஐயரும்) பிராமணரே யென்று, தமிழப் பார்ப்பாரும் அந்தணரும் தம் நிலையினின்று தள்ளப்பட்டமை.

இரண்டாம் நிலை : உழுவித்துண்ணும் வேளாளராகிய வெள்ளாளரும் சூத்திரருள் அடக்கப்பட்டமை.

மூன்றாம் நிலை : அரசரும் வணிகரும் உட்படத் தமிழ ரெல்லாரும் சூத்திரர் எனப்பட்டமை.

வெள்ளாளர் தம்மை உயர்த்தக் கருதிச் சற்சூத்திரர் என்று தம்மைச் சொல்லிக்கொண்டது சிரித்தற்குரிய செயலாம்.

நாலாம் நிலை : இசை நாடகத் தொழிலும் உழவுத் தொழிலுஞ் செய்துவந்த சில வகுப்பாரைத் தீண்டாராக்கி, அவரை ஐந்தாங் குலத்தினர் (பஞ்சமர்) என்றமை.

முதற்கண்

பாணரும், பின்னர்ப் பறையரும், அதன்பின் பள்ளரும் தீண்டாராக்கப்பட்டனர். இறுதியிற் சான்றாரையும் தீண்டாராக்கத் தொடங்கினர். ஆயின், ஆங்கிலராட்சியும் ஆங்கிலக் கல்வியும் கிறித்தவ நெறியும் பரவியதால், சான்றார் விழித்தெழுந்து தப்பிக்கொண்டதுமன்றித் தம்மை உயர்த்தியுங்கொண்டனர்.

சில வகுப்பார் தீண்டாராகவே, அவருக்குப் பணி செய்யும் வண்ணானும் மஞ்சிகனும் (மயிர்வினைஞனும்) ஆகிய குடிமக்களும், பூசை செய்யும் பண்டாரமும் தீண்டாராயினர்.

ஐந்தாம் நிலை : தீண்டார் நாளடைவில் பிராமணருக்குக் காணார் ஆக்கப்பட்டனர். அதனால், தீண்டுவார் தீண்டார் அண்டார் காணார் எனத் தமிழர் பிராமணரை நோக்கி நால்வகைப்பட்டனர்.

ஆறாம் நிலை : தீண்டார் மேல்வகுப்பாரான தமிழருள்ளும் சிலர்க்கு 30 எட்டுத் தொலைவிலும் சிலர்க்கு 60 எட்டுத் தொலைவிலும் விலகி நிற்க நேர்ந்தது.

ஏழாம் நிலை : மலையாள நாட்டுத் தீண்டாருள் ஒரு வகுப்பாரான நாயாடிகள், தமிழருக்கும் அல்லது மலையாளியர்க்கும் காணார் ஆயினர். தாழ்த்தப்படாத தமிழக் குலத்தாருள்ளும், உயர்வு தாழ்வுபற்றி ஒற்றுமைக் குலைவு ஏற்பட்டது.

பிராமணர், நிறத்திலும் துப்புரவிலும் நாகரிகத்திலும் தமக்கு எத்துணையும் தாழ்வில்லா மரக்கறி வெள்ளாளர் சமைத்ததையும் தொட்ட வுண்டியையுங்கூட இன்றும் உண்பதில்லை. தமிழருள் மரக்கறி வெள்ளாளரே தலைமையாகக் கருதப்படுபவர். அவருந் தாழ்த்தப்பட்டதனால், தமிழினம் முழுதும் தாழ்த்தப்பட்டதே யாகும். இன்று தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லப்படுபவர் உண்மையில் ஒடுக்கப்பட்டவரே யாவர்.