பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 295 விட்டது. தென்தமிழ் நாட்டுக்கு வந்தால் இன்பநிலையமே அந்தப் புதுவைச் சிறுத்தையின் பாசறையாக விளங்கும். ஆசான் பாரதி அமர்ந்திருந்த எங்கள் கூடத்து ஊஞ்சல் அவர் மாணவரையும் தாலாட்டியது. எப்போது வந்தாலும் சில நாட்கள் இன்பநிலையத்தில் தங்கியிருந்து ஓய்வு பெற்றுச் செல்வார். செட்டிநாட்டு இளைஞர் பட்டாளம் தேனீக்களாக அப்புதுவைத் தேனடையைச் சூழ்ந்து கொள்ளும். மாடியிலிருக்கும் அவருக்கு ஓடி ஒடிப் பணிவிடை செய்வேன். என்னை அவருடைய உடன் பிறவாத் தங்கையாகப் போற்றி மதித்தார். அம்மாடி!... கண்ணு!" என்று தான் அன்பொழுக அழைப்பார். "ஆகா என்ன தங்கை மேலே உருக்கம்!” என்று என் கணவர் கேலி செய்வார். “பின்ன என்ன? என்னால என் தங்கைக்கு எவ்வளவு தொல்லை! சிட்டு மாதிரி மாடிக்கும் கீழ்க்கட்டுக்கும் பறந்திக்கிட்டிருக்காளே!” என்று கூறி வருந்துவார். ஒருநாள் இன்ப நிலையத்தில் தங்கியிருந்த அவரைக் கோனாப்பட்டிலிருந்து பேசுவதற்காக அழைக்க வந்தனர். கோனாப்பட்டு முத்தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்று எண்ணுகிறேன். கோனாப்பட்டில் சிறுத்தொண்ட நாயனார் என்ற தலைப்பில் பாவேந்தர் பேசினார். கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து "குழந்தை அதுவும் ஒரே குழந்தை. தாய் மடியில் கிடத்தித் தந்தையே அக்குழந்தையின் கழுத்தை அறுத்தா இந்த நாளிலே சும்மா இருப்பீர்களா?” என்று உருக்கமாகக் கேட்டார். அக்கூட்டத்தில் இருந்த துடிப்பான திருப்பத்துர் மாணவர் இருவர் (பெயர்கள்: சு.மகாலிங்கம், நூர்முகம்மது) கொல்லுவோம்! கொல்லுவோம்! என்று கூச்சலிட்டனர். கொஞ்சநாள் கோனாப்பட்டுக் குழந்தைகள் எல்லாம் கோயில் பக்கமே போகவில்லை. பகுத்தறிவுச் சிந்தனைக்குப் பக்குவப்படாத மக்களிடையில் பாவேந்தர் அன்று பேசிய துணிச்சலான பேச்சு மிகப்பெரிய புரட்சியாகும். இந்தக் கோனாப்பட்டுப் பேச்சு துடிப்பான செயல் திறமைமிக்க இளைஞர் சிலரை இவர் எதிரில் கொண்டுவந்து நிறுத்தியது. அவர்களுள் பள்ளி ஆசிரியராகக் கோனாப்பட்டில் இருந்த கா.அப்பாத்துரையும், முருகு சுப்பிரமணியமும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த இருவரும் பன் மொழிப் புலவராகவும், பொன்னி ஆசிரியராகவும் எதிர்காலத்தில் வளர்ச்சியுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் இன்ப நிலையத்தில்தான் இச்செட்டிநாட்டு இளைஞர்கள் துணையோடு 'முத்தமிழ் நிலையம்' என்ற அமைப்பு உருவாக்கபட்டது.