பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நினைவில் நின்றவை பெரியதாகவும், ஒரு கறுப்பு வெளவால் தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது போலவும் இருக்கும். பாவேந்தர் மீசையின் மீது அதிக கவனம் செலுத்துபவர். சென்னையிலிருந்த போது வயதின் காரணமாக அவர் மீசை உதிர்ந்து அடர்த்தி குறைந்து காணப்பட்டாலும், அதை ஒழுங்காக வெட்டிவிட்டுப் பேணிக் காத்து வந்தார். பாவேந்தரின் மகனான கோபதி (மன்னர் மன்னன்) தந்தையாரின் உருவ அமைப்பை அப்படியே ஏற்றுப் பிறந்திருக்கிறார். ஆனால் பாவேந்தருக்குப் பக்கத்தில் அவரைக் கொண்டுபோய் நிறுத்தினால், ஒரு பீரங்கிக்குப் பக்கத்தில் துப்பாக்கியை நிறுத்தியதுபோல் தான் இருக்கும். பாவேந்தரின் பார்வையும், அங்க அசைவுகளும் அவருடைய மூத்த மகளான சரசுவதியிடத்தில் அப்படியே காணப்படுகின்றன. சிங்கம் நடக்கும்போது தன் தலையை இரண்டு பக்கமும் கம்பீரமாகத் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடக்கும். பாவேந்தர் எதிரில் இருப்பவர்களிடம் எதைப் பற்றியேனும் ஆழ்ந்து பேசும்போது தம் தலையை இரண்டு பக்கமும் திருப்பிப் பார்த்துக் கொண்டே பேசுவார். இந்த அம்மையாரும் அப்படியே பேசுகிறார். பாவேந்தர் சென்னையில் வாழ்ந்தபோது, அவருடைய பொருள் வருவாய் எப்படியிருந்தாலும் மிகவும் வசதியோடு தான் வாழ்ந்தார். குடியிருக்க எல்லா வசதிகளோடுங் கூடிய வளமனை. கொஞ்சநாள் சொந்தமாகக் கார் கூட வைத்திருந்தார். எடுபிடிக்கு ஆட்களும் உண்டு. சத்திரம் போல நாள்தோறும் நான்கைந்து பேருக்காவது வீட்டில் சமாராதனை நடந்து கொண்டிருக்கும். நிலையான விருந்தாளிகளாக இரண்டுபேர் எப்போதும் இருப்பார்கள். நான் சென்னையில் இருந்தபோது பாவேந்தரின் மனைவியார் பழனியம்மாள் பெரும்பாலும் புதுவையிலேயே இருந்தார்கள். தாயாரம்மாள் என்ற சமையல்காரியும், அவருக்கு ஒத்துழைக்க பட்டு என்ற வேலைக்காரியும் வீட்டில் இருந்தனர். தாயாரம்மாளுக்கு வயது ஐம்பதிருக்கும்; சுவையாகச் சமைப்பார். பாவேந்தரைத் தேடி யார் எந்த நேரத்தில் வந்தாலும், அவர் என்ன சமைக்கச் சொல்கிறாரோ அதைச் சமைக்க வேண்டும். நாள்தோறும் புலால் உணவில்லாமல் அவரால் இருக்க முடியாது. குறைந்தது மீனும் கத்தரிக்காயுமாவது குழம்பு வைக்க வேண்டும். இறால் (Prawn) தொக்கு அடிக்கடி செய்யச் சொல்லி விரும்பிச் சாப்பிடுவார். அவருக்குப் பருப்புரசம் பிடிக்காது. நிறைய மிளகை உடைத்துப் போட்டுக் கறிவேப்பிலை மிதக்கக் காரமாக வைக்கும் மிளகுரசம் தான் பிடிக்கும். மூன்று நேரமும் புலால் உணவே உண்டாலும்