பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18

வந்து, "கடைசி அடியை எனக்கு முடிக்கத் தெரியவில்லை; அதை முடித்துக் கொடுக்க வேண்டும்’' என்று கவிஞரிடம் கேட்டுக் கொண்டார்.

பார்த்தார் கவியரசர். தனக்குள் சிரித்தவாறு, “எனும் புராணக் கூற்றினைக் கொள்வார் உண்டோ?’' என்று முடித்துக் கொடுத்து அனுப்பி விட்டார்.

நகைச்சுவையோடு தம் கருத்தைப் புகுத்திவிட்டார்.

9

வாழைப் பழத்துக்காக ஒரு பாட்டு

கவிஞருக்குப் பெரியம்மா ஒருவர் இருந்தார். அவர் ஒரு சமயம், தான் வாங்கி வந்த வாழைப் பழச் சீப்பில், கவிஞர், கவிஞரின் மூத்த சகோதரர் ஆகியோருக்கு ஆளுக்கு ஒன்று கொடுத்துவிட்டு, மீதிப் பழங்களை பழங்கல அறையில் ஒளித்து வைத்து, ’அதை எடுத்துத் தின்னும்படி' பெரியபிள்ளைக்கு சைகை காட்டினார்.

எப்பொழுதுமே அவர்களுக்கெல்லாம் மூத்த பிள்ளையிடம் அதிகப் பிரியம். [இளைய பிள்ளை கவிஞர்] பெரியம்மாவின் வஞ்சனையை கவிஞர் கவனித்து விட்டார். ஆனால், பெரியபிள்ளையோ பெரியம்மாவின் சைகையைப் புரிந்து கொள்ளவில்லை.

பெரியம்மா தன் வேலை முடிந்ததென வேறு வேலையாகச் சென்றதுதான் தாமதம். கவிஞர், பழங்கல அறைக்குள் புகுந்து பழங்களை யெல்லாம் தின்று தீர்த்தார். கோல்களை பழங்கள் இருந்த இடத்திலேயே வைத்து விட்டு ஒடியே போய்விட்டார்.