பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்க்கை | சோழமன்னர்களின் மெய்க்கீர்த்திகள் மெய்க்கீர்த்தி என்பது பேரரசனது மெய்ப்புகழையும் வரலாற்றையும் எடுத்துரைத்து, அவன் தன் மாதேவி யருடன் நீடுவாழ்க என வாழ்த்தி, அம்மன்னன் இயற்பெய ரோடு சிறப்புப் பெயர்களையும் ஆட்சியாண்டினையும் கூறும் செய்யுளாகும். இதனைச் சீர்மெய்க் கீர்த்தி என்றும் வழங்கு வர். இதன் இலக்கணத்தை

  • சீர் நான் காகி யிரண்டடித் தொடையாய் வேந்தன் மெய்ப்புக ழெல்லாஞ் சொல்லியும் அந்தத் தவன்வர லாறு சொல்லியும் அவளுடன் வாழ்கெனச் சொல்லியு மற்றவன் இயற்பெயர்ப் பின்னர்ச் சிறக்க யாண்டெனத் திறப்பட வுரைப்பது சீர்மெய்க் கீர்த்தி'

என்னும் பன்னிருபாட்டியல் சூத்திரத்தால் நன்குணரலாம் அன்றியும், வச்சணந்திமாலை வெண்பாப் பாட்டியலின் ஆசிரியராகிய குணவீரபண்டிதர் என்பார், ' தொழிலார்ந்த மெய்க்கீர்த்தி சொற்சீரடியால்--எழிலரசர் செய்தி இசைப் பர்' என்று கூறியிருத்தல் அறியத்தக்கது. இது பெரும் பான்மை அகவலோசையும் சிறுபான்மை கலியோசையும் கொண்டு அமைந்துள்ளது. இத்தகைய மெய்க்கீர்த்தி யைக் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை முதலில் உண்டு பண்ணியவன் பெரு வேந்தனாகிய முதல் இராசராச சோழனேயாவான். அவனுக்குப்பிறகு அவன் வழிவந்த சோழமன்னர்களும் பாண்டி வேந்தர்களும் அச்சிறந்த செயலைத் தாமும் மேற்கொண்டு ஒழுகுவாராயினர். பேரரசர்களாக விளங் கிய தமிழ் வேந்தர்களின் கல்வெட்டுக்களில் தான் மெய்க் கீர்த்தி காணப்படுகிறதேயன்றிக் குறுநிலமன்னர் முதலான ஏனையோர் கல்வெட்டுக்களில் அது காணப்படாமை குறிப் பிடத்தக்கது.