பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோழர் நிலை

11

கோயிற் பெருமானுக்குப் பல்லவ வேந்தனாகிய தந்திவர்மன் ஆட்சியில் சோழ நாட்டுச் சோழனார் உலகபெருமானார் திருவிளக்கு வைத்து அதற்கு முதற்பொருளாக முப்பது கழஞ்சு பொன் அளித்துள்ளமை அவ்வூர்க் கல்வெட்டால் அறியப்படுகின்றது, 1 இவன் கி. பி. எட்டாம் நூற்றாண் டின் இறுதியிலும், ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத் திலும் சோழ நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சோழர் குலக் குறு நில மன்னன் ஆவன்.

கி. பி. 831-ஆம் ஆண்டில் குமாராங்குசன் என்ற பெய ருடைய சோழ மன்னன் ஒருவன் இருந்தனன் என்பது பல்லவ வேந்தனாகிய தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் ஆட்சியில் வெளியிடப்பெற்ற வேலூர்ப்பாளையச் செப்பேடு களால் வெளியாகின்றது. 2 அச்செப்பேடுகளில் முதலில் நந்திவர்மன் ஆட்சியாண்டு வரையப் பெற்றுப் பிறகு மற்றைச்செய்திகள் குறிக்கப்பட்டிருத்தலால் அச்சோழன் நந்திவர்மப் பல்லவனுக்குத் திறை செலுத்திக் கொண் டிருந்த ஒரு சிற்றரசன் என்பது நன்கு துணியப்படும். அவன் சோழர்குலத்தில் தோன்றிய வீரர் தலைமணி என்றும் கொடையில் கர்ணனைப் போன்றவன் என்றும் நேர்மையான ஒழுக்கமுடையவன் என்றும் அச்செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. அவன் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ நாட்டில் குறுநில மன்னனாக வாழ்ந்துகொண்டிருந்த ஒரு சோழர்குலத் தோன்றல் என்பதில் ஐயமில்லை.

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில், கும்ப கோணம் என்று இந்நாளில் வழங்கும் குடமூக்கில் நடை பெற்ற போரில் பாண்டியன் சீமாறன் சீவல்லபன் பரச் சக்ர கோலாகலன் என்பான், சோழர் பல்லவர், கங்கர் முதலானோரைப் போரில் வென்று புறங்காட்டி ஓடச்செய்


1. 2. S. 1. I., Vol. XII, No. 43 Ibid, Vol. II, No. 98.