பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

புகழேந்தி நளன் கதை



எதற்கும் கண்ணனைத் தூது அனுப்பி வைப்பது என்று முடிவு எடுத்தனர்; கண்ணனைத் தூது அனுப்பி வைத்தனர். நாடும் தரமுடியாது; இருக்க வீடும் கிடையாது என்று துரியன் வீர முழக்கம் செய்தான். போருக்கு அவன் துணிந்து நின்றான்.

அடுத்துப் போர் செய்வதுதான் வழி என்று அதற்கு வேண்டிய படைகளைத் திரட்டுவதில் பாண்டவர் முனைந்தனர்; அவர்களுக்கு வேண்டிய அரசர்கள் அவர்களுக்குத் துணையாகச் செயல்பட அங்கு வந்து கூடினர். முனிவர்கள் பலரும் அவர்களுக்குத் தக்க அறிவுரைகள் தர அங்கு வந்து சேர்ந்தனர்.

வேதம் வகுத்த வியாசனும் அவர்கள் ஏதம் அறிந்து ஆறுதல் கூற அடவியை அடைந்தான். அவன் வருகை கண்டு தன் இருக்கை விட்டு எழுந்து தருமன் வரவேற்றான்.

அவன் வருகையால் தன் பிறவிப் பெருந்துயர் எல்லாம் தீர்ந்தது என்று போற்றிப் புகழ்ந்தான். வியாசன் தருமன் மனத் தளர்ச்சியைக் கண்டு அவன் கவலையோடு இருப்பதை அறிந்தான். தோல்வி கண்டு மனம் தளராதவன் தருமன். உயர்விலும், தாழ்விலும் சமநிலை காட்டும் மனநிலை உடையவன். அத்தகையவன் சித்தம் கலங்கியது ஏன் என்று கேட்டான்.

தருமன் தன்நிலையை எடுத்து உரைத்தான். “போருக்கு உரிய செயற்பாடுகள் அனைத்தும் செம்மையாக நடைபெறுகின்றன; அர்ச்சுனனும் கயிலை சென்று பரமசிவன்பால் அத்திரம் பெறச் சென்றுள்ளான். விரைவில் வருவான்” என்று தெரிவித்தான். “எங்களுக்கு ஆற்றல் உள்ளது; மேலும் திரு எங்களை வந்து சேரும்; அதற்காகக் கவலைப்படவில்லை” என்று கூறினான்.

“கவலையுற்ற நிலைக்குக் காரணம் யாது?” என்று வியாசன் கேட்டான்.