பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

புகழேந்தி நளன் கதை



காட்டில் நெடிய நெருப்பில் சிக்கித் தவிக்கின்றேன். என்னை எடுத்துவிடு” என்று இரந்து கேட்டது.

சோகக் குரல் கேட்டு வேகமாகச் சென்று அதனைக் காக்கத் துணிந்தான். அதனை அவன் நெருப்பினின்று எடுத்தான். சற்றுத் தள்ளி அதனைவிட நினைத்தான்.

“நீ பத்து அடி நடக்க; பின் என்னை விடுக்க” என்று கேட்டுக் கொண்டது.

நெருப்பை விட்டுப் பத்து அடி நடந்தான். காலால் பத்து அடிகள் எடுத்து வைத்துப் பின் அதனைத் தரையில் விட்டான்.

நன்றி கூறுவதற்கு மாறாக அது கொடுமை செய்தது; அவனைக் கடித்தது; நஞ்சு உடம்புக்கு ஏறியது. அவன் சாகவில்லை; தெய்வ வரம் அவனுக்குத் துணை செய்தது. மற்றும் அவன் சாக அது கடிக்கவில்லை. வேகமாகச் செய்த செயல் விளைவு; அவன் தப்ப நினைக்கும் முன் இந்தத் தவறு அது செய்து முடிந்தது.

நெடியவன் குறுகியவன் ஆயினான். திருமால் வாமனன் ஆயினான். நீண்ட தோள்களை உடைய அரசன் குறுகிய தோளினன் ஆயினான். ஆள் உருமாறினான்; கருநிறத்தினன் ஆயினான்; பேரரசன் சாமானியன் ஆயினான். பாட்டாளியின் இனத்தவன் ஆயினான்.

ஏன் தன்னை இது இவ்வாறு மாற்றியது. இந்த வடிவில் சென்றால் காதலிகூட தன்னைக் கருத்தில் கொள்ள மாட்டாள். எப்படி தமயந்தியின் முகத்தில் விழிப்பது. பிள்ளைகள் தன்னை அடையாளம் காண முடியாத நிலையை எண்ணிப் பார்த்தான்.

“இதுதான் நன்றிக் கடனா?” என்று கேட்டான்.