பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

99




“நான் ஒன்று கூறுகிறேன் கேள். கார்க்கோடகன் என்பது என் பெயர். நான் கடித்ததால் நீ கருநிறம் பெற்றாய்; இது என் பல்லுக்கு ஏற்பட்ட வலிமை; உனக்கு நன்மை செய்யவே உன்னை மாற்றினேன். நீ உருமாறுவது உனக்கு நன்மை தருவது ஆகும். ‘நளன்’ என்று யாரும் உன்னைக் காணமாட்டார்கள். நீ மறைந்து வாழ முடியும். உனக்கு இது நன்மை” என்றது.

“இப்படியே இருந்தால் என் எதிர்காலம்?”

“காலம் மாறும்; கலி நீங்கும்; அப்பொழுது உன் துயர் அகலும்; வேண்டும்போது நீ பழைய உருவை அடைவாய்” என்று கூறியது.

அழகிய ஆடை ஒன்று தந்தது. “இந்த ஆடையை நீ எப்பொழுது உடுத்துக் கொள்கிறாயோ அப்பொழுது நீ பழைய உருவைப் பெறுவாய்” என்று கூறியது.

“நீ தோள் குறைந்துள்ளமையால் உன்னை ‘வாகுவன்’ என்று கூறுவர். அதுவே நீ ஏற்கக் கூடிய பெயரும் ஆகும். ‘வாகு’ என்றால் தோள் என்பது பொருள் ஆகும். தோள் சிறுமை கருதி உன்னை வாகுவன் என்றே அழைப்பார்கள், இது உனக்கு உதவும் பெயராகும்” என்றது.

நளன் புதிய மனிதனாக மாறினான். தோள்வலி குறைந்தவனாக அவன் மாறினான். எந்தப் பெண்ணும் அவனைக் காதலிக்கமாட்டாள். அந்த வகையில் அது அவனுக்குத் தற்காப்பாக அமைந்தது; எளியன் என்பதால் எவரும் அவனை ஏவல் தொழிலுக்கு ஏற்க இசைவர் காவலன் ஏவலனாக மாற இது அவனுக்கு உதவியது.

“அடுத்து நீ அயோத்தி செல்க, அங்கு அரசனிடம் தேர் ஒட்டியாகப் பணி ஏற்க” என்று அது அறிவித்தது. குட்டைக் கையனாக மாறியவன் நெட்டை வழி நோக்கி நடந்தான்.