பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

புகழேந்தி நளன் கதை




“என் தந்தை வாய்மையை மதித்தவர். அதனால் வாய்மூடிக் கொண்டார். நாட்டை வலிமையால் வவ்வ முடியும். வீரம் இல்லாமல் இல்லை; எனினும் கட்டுப் பட்டவர்; இழந்ததைத் திரும்பிப் பெற முயல்வது பிச்சை எடுப்பதற்கு நிகராகும். அதை அவர் செய்யவில்லை; நிச்சயம் ஒரு நாள் நாட்டைத் திரும்பப் பெறுவோம்” என்று உறுதி கூறினார்.

“மன்னர் பெருமை மடையர்கள் அறிய மாட்டார்கள்; என்னை மன்னித்துவிடுக” என்று தாழ்ந்து பேசினான் நளன்.

மக்களும் தந்தையும் சூடு பிறக்கப் பேசியது அருகிருந்து கேட்டாள் சேடி; அவர்களை அழைத்துக் கொண்டு மாளிகை வந்து அடைந்தாள்.

இச் செய்திகளைப் பதிவு செய்து கொண்டாள்; தட்டில் அல்ல; மனத்தட்டில்; அப்படியே தமயந்தி இடம் ஒப்புவித்தாள்.

நளன் மக்கள்பால் காட்டிய பாசத்தையும், வீர உரையையும், அதற்கு இவர்கள் சொன்ன சொற்களையும் விடாமல் பேசினாள். புலியின் புதல்வர்கள் பூனைகள் ஆவது இல்லை என்பதை அறிந்து மெய்ம் மயிர் சிலிர்த்தாள். வீரம் உடையவர் தம் மக்கள் என்பதை அறிந்தாள்.

நளன் அவன் உளன் என்பதை அறிந்தாள். மற்றும் அவன் இருந்த கோலத்தைக் கேட்டாள் “கைகள் கரிந்துள்ளன” என்று அந்த மங்கை உரைத்தாள். அது புகையால் கரிந்துவிட்டது என்று கருதினாள்.

“அந்தக் கைகள் அடுப்புப் புகையால் கருகியவோ?” என்று கருதி அழுதாள்; “கொங்கை அளைந்து தன் கூந்தலைத் திருத்தி வருடிய அவன் அங்கை இரண்டும் இவ்வாறு கருகிவிட்டனவே” என்று கூறி வருந்தினாள்.