பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

125



பிரிந்தவர் கூடினர். ஆனால் பேச இயலாமல் போய் விட்டது. காண வேண்டும் என்று விழைந்தாள், காண முடியாமல் போய்விட்டது. காரணம் அவள் விழிகளை அவள் கண்ணீர் மறைத்தது.

விழிகள் துயில் கொண்டு இருந்த நேரத்தில் அவன் விழிகள் அவளைப் பார்க்காமல் நீங்கின. அவளைவிட்டுப் பிரிந்தான்; அவன் பிரிந்தான் என்பதை அவளால் மறக்க முடியாமல் போய்விட்டது. அதை வினாவாக வைத்து அவனைக் கேட்க விரும்பினாள். பார்வையே பேச விரும்பியது. ஆனால் கண்ணீர் போர்வையாக இருந்து மறைத்துவிட்டது. அதனால் கருத்து பரிமாற்றம் ஏதும் நிகழாமல் போயிற்று.

வாழ்த்துக் கூறுவதற்கு என்றே வானவர்கள் பூக்களைச் சேர்த்து வைத்து மழைபோல் பொழிந்தனர். குளிர்ச்சியைத் தந்தது; நறுமணமும் தந்தது. வண்ணத்தால் அழகும் சேர்ந்தது. பூமாரி பொழிந்தனர் தேவர்கள் என்று எங்கும் பேசினர்.

உத்தமன் இவனைப்போல் எத்திசையும் இல்லை என்று இந்த இமையவர்கள் வாழ்த்துரை வாசித்து அளித்தனர். அது மண்ணுலகத்தில் எதிர் ஒலித்தது. தேவர்களின் பாராட்டினைப் பெற்றான்; அதனால் பெருமை உற்றான்.

கலிதோற்றான்; இவன் வெற்றியை ஏற்றான். தொடர்ந்து இவனை அச்சுவேறு ஆணி வேறாகப் பிரித்து அலசிப் பார்த்தவன் கலியன்; அவன் தேவியின் கற்பும், பொற்பும், அவள் விளைவித்த அற்புதங்களும் கண்டு திகைத்தவன்; அவன் ஒரு நற்சான்று இதழை அழகாக வரைந்து தந்தான். “தேவியின் கற்புக்கும் செங்கோல் முறைமைக்கும் பூஉலகில் ஒப்பார் யாரும் இல்லை” என்று பாராட்டினான்.