பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

புகழேந்தி நளன் கதை




“மற்று உனக்கு என்ன வரம் வேண்டும், கேட்டுப் பெற்றுக் கொள்” என்று பார் அளிக்கும் பார்த்திபனிடம் கூறினான். உலகைக் காக்கும் உயர் வள்ளல் அவனிடம் மடிதட்டிக் கொண்டு திருமகள் இடம் கேட்டது; உதவுவதற்கு விரைந்தது.

“வரம் கேள்” என்று கேட்டான் கலி.

“தரம் உள்ளதாக இருக்க வேண்டும்” என்று சிந்தித்துப் பார்த்தான்.

“நீ நல்லது செய்யாவிட்டாலும் கெட்டது செய்யாதே! அதுபோதும்” என்றான்.

“என் பிறவிக் குணம் அது என் ஜீவனம்; பிழைப்பு; தீயவை செய்வதற்கு என்றே படைக்கப்பட்டவன். அதனால் உன் வரத்தில் சிறிது திருத்தம் செய்து கொள்” என்று கூறினான்.

“என் கதையை இந்த உலகம் பேசும்; ‘நளன் கதை’ என்று தலைப்புத் தருவர். இதைக் கேட்கும் நல்லோர் நானிலத்தில் இருப்பர். அவர்களுக்கு எந்தத் தீமையும் செய்யாதே அதுபோதும்” என்று கேட்டுக் கொண்டான்.

“உன் கதை உலகுக்கு ஒரு படிப்பினை. ‘செய்வன திருந்தச் செய்’ என்பது நீ கற்றுத் தந்த படிப்பினை உன் கதையைக் கேட்பவர் இனி விழிப்புடன் செயல்படுவர். அவர்கள் வழுக்கி விழமாட்டார்கள். யானும் அவர்களுக்கு இழுக்குத் தரமாட்டேன்” என்று உறுதி தந்தான்.

“நாட்டில் சட்டங்கள் சரிவரச் செயல்பட்டால் நீதிகள் கெடுவது இல்லை; நெறிகள் பிறழ்வது இல்லை. நீதியும் சட்டமும் நிலை நின்றால் உலகுக்குக் கேடு இல்லை” என்று கலி கூறி விடைபெற்றான்.