பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

புகழேந்தி நளன் கதை



7. பெண்மை அரசு

பெண்களின் நற்குணங்களை அழகிய உருவகங்களில் தருவது தனித்தன்மை கொண்டு விளங்குகிறது. பெண்மை இயலுக்குத் தந்த சித்திரம் இது.

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்.
ஆளுமே பெண்மை அரசு

நாற்குணம்-அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பன நான்கு வகைப் படைகள்; ஐம்புலன் அமைச்சர்கள் என்கிறார். கண்கள் வேல், வாள்; முகம் வெண் கொற்றக் குடை; இதன் கீழ் பெண்மை அரசு ஆள்கிறது என்கிறார். பெண்ணுக்கு உரிய தற்காப்புகள் இவை என்கிறார் கவிஞர். ‘தற்காத்து’ என்பார் வள்ளுவர். அதற்கு விளக்கமாக அமைந்துள்ளமையைக் காண முடிகிறது.

8. சொல்லாட்சிகள்

உனக்கும் தமயந்திக்கும் உள்ள உறவு எத்தகையது என்று கேட்கிறான் நளன். அதற்கு விடை தருகிறது அன்னப் பறவை.

“நாங்கள் பூஞ்சோலையில் வாழும் பறவைகள்; அவள் அரண்மனைக்குச் செல்வது வழக்கம். நடையைக் கற்பதற்கு நாங்கள் செல்கிறோம்; மன்மதன் படைகற்க அங்கு வருவான் என்று கூறுவது நயம் மிக்கதாக உள்ளது. நடை கற்க யாம் செல்வோம் படைகற்க அவன் வருவான்” என்பது சுவை தரும் செய்தியாக அமைகிறது.

பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாம்; அவள் தன்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்கள் - காமன்
படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள் பாத
நடைகற்பான் வந்தடைந்தோம் யாம்