பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

143



நாட்டுப் பற்றையும் காட்டுகிறது. தமிழ் மன்னனுக்கு முதலிடம் தருகிறார்.

காவிரியைப் ‘பொன்னி’ என்று உருவகப்படுத்திக் கூறுவது சிறப்பாக உள்ளது. மழை நீரை அமுதம் என்றார் வள்ளுவர். அதை உள்ளடக்கிப் ‘பொன்னி அமுதம் புதுக் கொழுந்து’ என்கிறார். புகழேந்தி; நீரைப் புதுக் கொழுந்து என்பது அடுத்த உருவகம். அது கமுகின் சென்னி தடவுகிறது என்கிறார். உருவகச் சொல்லாட்சிகள் இத் தொடரை அழகு படுத்துகின்றன. ஒவ்வொரு சொல்லும் இனிமையைத் தருகிறது. ‘பொன்னி அமுதப் புதுக் கொழுந்து’ என்பது காவிரிப் புது வெள்ளத்தில் நீர்த் துளிகளைக் குறிக்கின்றது. நீரை அமுதம் என்று சொல்வது வள்ளுவர் கருத்தை உள்ளடக்கியதாக உள்ளது.

பொன்னி யமுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின்
சென்னி தடவும் திருநாடன் - பொன்னிற்
சுணங்கவிழ்ந்த பூண்முலையாய் சூழமரிற் றுன்னார்
கணங்கவிழ்ந்த வேலனிவன் காண்.

17. மக்கள் செல்வம்

மக்கள் செல்வத்தின் மாட்சிமையைக் கவிஞர் மிக அழகாகக் கூறுகிறார். வள்ளுவர் கருத்துகளை உள்ளடக்கி அவற்றைத் தொகுத்து ஒரே கவிதையில் தருவது செறிவும் அழகும் கொண்டு விளங்குகின்றன

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்?

“இன்னடிசில் புக்குஅளையும் தாமரைக் கை பூ நாறும் செய்ய வாய் மக்கள்” என்ற சொல்லாட்சி அழகும் இனிமையும் தருகிறது.