பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

145




“தீவாய் அரவு அகற்றினேன்; அத்தகைய இரக்க உணர்வு உடையவன் யான்; காதலியை இரவு அகற்றி வந்தேன். இது மிகவும் கொடுமை".

“இதைப் போல நீயும் உன் காதலியைக் கைவிட்டு விட்டு வந்தாயோ! இரவில் சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து வந்தாயா! என்னைப் போலவே நீ அலைகிறாய் மனம் குலைகிறாய் நிலை தளர்கிறாய் எனக்கு விளங்க வில்லையே” என்கிறான். இதுவும் தற்குறிப்பேற்ற அணியாகிறது.

“நாவாய் குழற நடுங்குறுவாய்” என்பதில் சிலேடை நயமும் அமைந்துள்ளது. நாவும் வாயும் குழற என்பது ஒரு பொருள். நாவாய் மரக்கலம் என்ற பொருள் உடையது; கடலில் மரக்கலம் அசைந்து செல்கிறது. அதை வைத்து நாவாய் குழற என்றும் கூறுவதாக அமைகிறது.

போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் - தீவாய்
அரவகற்றும் என்போல் ஆர்கடலே மாதை
இரவகற்றி வந்தாய்கொல் இன்று

20. இருவேறு நிலைகள்

கண்ணகி மதுரையில் கணவனோடு புகுந்தாள். வெளியே போகும் போது தனியே சென்றாள். இதை நினைத்துப் பார்க்கிறாள். இருவேறு காட்சிகளை ஒரே இடத்தில் வைத்துச் சோகத்தைப் பேசுகிறான். “கீழத்திசை வாயில் கணவனொடு புகுந்தேன். மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு” என்கிறாள். இருவேறு நிலைகளை ஒருங்கு உரைத்து முரண்பாடு காட்டும் காட்சி இது.

இதே போன்று பாரி மகளிர் தந்தை இழந்த நிலையில் கையறு நிலையாகப் பாடுகின்றனர். “அற்றைத் திங்கள்