பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

13



மயில் கூட்டம் சென்று வளைப்பதுபோல் அவர்கள் அந்த அன்னத்தை வளைத்துப் பிடித்தனர். அதனை அவன் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

“தன்னை இவர்கள் ஏன் பிடித்து வந்தார்கள்” என்பது அதற்கு விளங்கவில்லை” கூட்டத்தில் கூடி இருந்து ஆடி மகிழும் பறவை அது. தனித்து விடப்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்தது; தன் சுற்றம் ஆகிய அன்னப் பறவை ஏதாவது அங்குத் தென்படுமா என்று பார்த்தது. ஏக்கத்தால் அது தாக்கம் பெற்றது; நடுங்கியது; தனிமையால் வாடியது; தன் வான் கிளையைத் தேடியது.

அதன் நடுக்கத்தைக் கண்டு நளன் வடுநீங்கிய மாற்றம் உரைத்தான். “அன்னமே நீ அஞ்சாதே! உன்னை யான் பிடித்து வரச் செய்தது உன் அழகிய நடையைக் காணவே; கவிஞர்கள் மகளிர் நடைக்கு உன் நடையை ஒப்புமை கூறி வருகின்றனர். எனக்கு ஒரு ஐயம்; உன் அழகிய நடை சிறந்ததா? மகளிர் தம் மாட்சிமைப்பட்ட நடை சிறந்ததா ஒப்பிட்டுக் காணவே பிடித்து வரச் செய்தேன்.” இதில் தப்பு ஏதும் இல்லை என்று விளக்கினான்.

அங்கே அழகிய பெண் ஒருத்தி இந்த அன்னத்தைப் பிடித்து வந்திருந்தாள். தாமரையில் இருக்கும் திருமகள் போல் அந்தப் பெண் இருந்தாள். அழகி அருகில் நிற்க இந்த அன்னம் அந்தச் சூழ்நிலை கண்டு மகிழ்ந்தது. அவன் மகளிர் பால் நாட்டம் உடையவன் என்பதை அறிந்தது. காதல் செய்யும் காளை அவன் என்பதை அறிந்தது.

அவன் இரக்கம் உள்ளவன் என்பதை அறிந்தது; யாரையும் வருத்தாதவன் என்பதையும் அறிந்தது; ‘தண்ணளியான்’ என்று அவனைப் பற்றி முடிவு செய்தது. அச்சம் அதனை விட்டு அகன்றது.

அவன் பேரழகன் என்பதைக் கண்டு தெளிந்தது. அவனுக்கு ஏற்றவள் யார் என்று எண்ணிப் பார்த்தது.