பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

புகழேந்தி நளன் கதை



“அவன் தோள்களை நீ தழுவ உதவுவேன்; நீ கவலை கொள்ளாதிரு; அவன் தோள்கள் உன் வன முலைக்குக் கச்சு ஆகும்படி செய்வேன்” என்று கூறியது. மன்மதன் அம்புக்கு இலக்கு ஆகிக் கலக்கமுற்று இருந்த நளன்பால் சென்றது.

அன்னம் அவளை விட்டு நீங்கியது; பின்னர் அவள் நிலைமை என்ன ஆயிற்று? காதல் நெஞ்சத்தில் காரிகை கலக்க மடைந்தாள். தனிமையை நாடினாள். தோழிகளை விட்டு ஒதுங்கினாள்; உண்பது உறங்குவது ஒழிந்தாள். மேனி பசலை பாய்ந்தது; வாட்டமுற்றாள். தோழியர் காரணம் கேட்டுப் பார்த்தனர்.

அவள் தக்க மாற்றம் தந்திலள்; கிளவிகள் சிலவே அவள் வாயில் பிறந்தன. அவள் காதல் மயக்கத்தை அக் கன்னியர் அறிந்தனர். அவள் தாய்க்குச் சென்று உரைத்தனர். தாய் அவளைப் பெற்ற தந்தைக்குக் கூறினாள். விதர்ப்பன் சிந்தித்தான். “சிறுமி அல்லள் அவள்” என்பதை அறிந்தான். “பருவ விழைவு” இது என அறிந்து செயல்பட்டான்.

கன்னியர் தங்கும் மாடத்தில் அவள் தன்னந்தனியாக இருந்தாள். அரசன் உரிய சுற்றத்தோடும் படை வகுப்புகள் பின் தொடர அம்மாடத்தை அடைந்தான். முரசு கேட்டு அவள் அவனைப் பரச விரைவில் வந்தாள். அவன் காலடிகளில் விழுந்து தொழுதாள். அவள் கண்ணிர் அவன் பாதங்களை நனைத்தது; சொற்கள் பயன் அற்றுப் போய் விட்டன. உணர்வுதான் பேசியது. அரசன் அவளை விளக்கமாக விசாரிக்காமல் விசனம் அறிந்து திரும்பினான். பேரழகு சோர்கின்றது என்று கூறும்படி அவள் சிறு நெற்றியில் வியர்வை அரும்பியது. “மணம் செய்வது; அதுதான் தக்கது” என்று முடிவு செய்தான்.