பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

புகழேந்தி நளன் கதை



மன்மதன் படை கற்பதற்கு அங்கு வருவான் என்று கூறியது நினைவுக்கு வந்தது. அன்னங்கள் மயிற்கூட்டம் எனச் சென்று அங்கு நடை பயின்றன என்று கூறியிருந்தது. அவள் தங்கி இருந்த மாடத்தை அணுகினான்.

தங்கு தடையின்றி தமயந்தியை அவன் காண முடிந்தது. அவன் விழிகள் அவளை நோக்கின. அவளும் நோக்கினாள். அவளை அவன் பார்த்தது தாமரை மலர் குவளையில் சென்று பூத்தது போல் இருந்தது. அவள் அவனை நோக்கியது கருங்குவளை தாமரையில் பதிந்து பூத்ததைப் போல் இருந்தது. காதலர்க்கே உரிய பொது நோக்கு அவர்கள்பால் அமைந்திருந்தது.

அவள் தன் நெஞ்சைப் பறி கொடுத்தாள். அவன் அழகு அவளைக் கவர்ந்தது. அவனைத் தழுவிக் கொள்ள விழைந்தாள். கச்சணிந்த கன்னி அவள் அவன்பால் இச்சை மிக்கவள் ஆயினாள். அவன் தோளைத் தழுவி அணைக்க ஆவல் கொண்டாள். தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் தவித்தாள்; என்றாலும் நாணம் அவளைத் தடுத்து நிறுத்தியது. யானையைக் கட்டுக்குள் அடக்கும் கட்டுத்தறிபோல் அவன்பால் வேட்கையைத் தடுத்து நிறுத்தியது.

உள்ளங் கலந்து பின் உரையாடினர். அவன் காவல் கடந்து வந்தது அவளுக்கு வியப்புத் தந்தது. “காவல் கடந்து எங்கள் கன்னி மாடம் புகுந்தாய்; அது உன்னால் எவ்வாறு இயன்றது? விஞ்சையனும் அல்ல நீ; விண்ணில் வாழும் தேவனும் அல்ல. உன்னால் அது எவ்வாறு இயன்றது? உள்ள நிலை எனக்கு உரைப்பாய்” என்று வினவினாள்.

“தான் மானுடன்தான்” என்று நகைத்துக் கொண்டே பேசினான்.