பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

புகழேந்தி நளன் கதை



அந்த இரவில் ஊர் மக்கள் துயின்றனர். நகரமே உறக்கத்தில் ஆழ்ந்தது. விழித்து ஒலி எழுப்பியவர் யாருமே இல்லை; ஊர்க்காவலர் மட்டும் அவ்வப்போது கைகளில் வேல் தாங்கி வீதிகளில் நடந்தனர். அவ்வப்பொழுது அவர்கள் துடி ஒலித்து எழுப்பியது; அது மட்டும் அவள் கேட்டுக் கொண்டே இருந்தாள். எப்பொழுது யாமங்கள் கழியும் என்று காத்துக் கிடந்தாள்.காவலர் வருகை கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுக் கொண்டாள்.

அந்த நகர் ஆழ்ந்த துயிலில் கிடந்தது. களிறுகளும் ஒலியடங்கிக் கட்டுத் தறியில் புகுந்து அடங்கின. இரவு நேரத்தில் யாழிசைப்போரும் இசை எழுப்பி அவர்களும் அடங்கினர். மன்மதனும் அடங்கி விட்டான். அவனும் ஒய்ந்து அடங்கினான். இந்த உலகமே துயிலில் புகுந்து அடங்கியது.

பேய் இரவில் தூங்காது என்று கூறுவர். பிணம் தின்று வயிறு வளர்க்கும் பேயும் உறங்கியது. அதன் நட மாட்டமும் அடங்கியது. அன்றில் பறவை தன் துணையை விளித்து உறங்காமல் கிடந்தது; அந்தக் குரல் அவளுக்குக் காதலைத் துண்டியது.

அமைதி என்பது அவளை விட்டு நீங்கியது. அவனைக் கட்டித் தழுவ விழைந்தாள். துயிலின்றி எழுந்தாள். அருகிருந்த தூண் ஒன்றினை அணைத்துத் தழுவினாள். அது அவள் காதலன் என்ற நினைப்பில் இறுகத் தழுவினாள். அது கல்; வெறும் கல்; ஒரு சிலர் மனம் போன்று விளங்கியது.

கனவு கலைகிறது; நனவு அவளை அழைக்கிறது. கட்டிக் கொண்டது வெறும் தூண். அவன் அல்ல; அதற்காக நாணினாள்; இதை யாரிடம் எடுத்துக் கூறுவது? வெளியில் சொன்னால் எள்ளி நகையாடுவர். அந்த அனுபவம்