பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

65



புட்கரன் வெறுங்கையைக் கொண்டு முழம் போட்டான். வைப்பதற்கு அவனிடம் எந்தப் பொருளும் இல்லை; பொன்னும் இல்லை; ஆரமும் இல்லை. அவன் கொண்டு வந்தது யாதும் இல்லை. ஏறி வந்த எருது அதைக் காட்டினான்.

“எருது என் பணயம்” என்றான்.

அவனிடம் உள்ளது அதுதான் என்பதால் நளன் மறுப்புக் கூறவில்லை; ஆடுவதில் காட்டிய வேகம் அவன் அறிவை மயக்கியது.

கவறை உருட்டினான்; அது இவனுக்கு எதிராகப் புரண்டது. மணியாரம் அவன் கைக்குச் சென்றது.

கலி கவறாகப் புரண்டான்; இவனுக்கு முரணாக அது விழுந்தது.

“வைத்த மணியாரம் வென்று விட்டேன்; மறு பணயம் இதற்கு நிகரானது கூறுக” என்று அழைத்தான். தொடர்ந்து அவன் வைத்திருந்த நிதி அத்துணையும் வைத்தான்; இழந்தான்.

பதுமை நிகர் பாவையர் இருந்தனர். அவர்களையும் வைத்து ஆடினான். அவர்கள் எதிர்கட்சியில் சேர்ந்தனர்.

படைகளை வைத்தான்; அவை எதிரிக்குக் கை மாறினர் தேர் வைத்தான்; யானை வைத்தான் ஏறுவதற்கு என்று ஒன்றும் இவன் வைத்துக் கொள்ளவில்லை.

ஆட்சியை வைத்தான். தன் மாட்சிமையை இழந்தான். வீழ்ச்சியினை அடைந்தான். படிப்படியாகச் சரிந்தான். பாதாளத்தில் விழுந்தான். பரமபதம் ஆட்டம் அதில் பாம்பின் வாயில் விழுந்தான். அது கீழே கொண்டு போய் விட்டது. எல்லாம் இழந்து எளியன் ஆயினான்.