பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

67



அரசன் ஆட்சியை இழந்தான்; நாட்டை மற்றொருவன் கவர்ந்தான்; இனி எப்படி வாழ்வது? இந்த அவலம் நாட்டவரை நலிவித்தது.

அழுகை என்பது அனைவரையும் ஆட்கொண்டது. பால் அருந்தும் குழந்தையும் பால் குடிக்க மறுத்தது. ஆவும் அழுத; பூவும் அழுத; புனல் அழுத; புள் அழுத என்று கூறும்படியாயிற்று. கருப்புக் கொடி எங்கும் மாட்டப் பட்டது. கொடி இறக்கப்பட்டது. துக்க நாள் என்று மக்கள் அறிவித்தனர்.

அவனை மக்கள் சூழ்ந்தனர். துயரத்தில் ஆழ்ந்தனர்; “ஆருயிரின் தாயே! அறத்தின் பெருந்தவமே! அருளின் திருஉருவே! பெருமகனே! நீ சென்று விட்டால் யார் இந்தப் பாரினைக் காப்பர்?” என்று கேட்டனர். கண்களில் நீர் ஒழுகியது; அவன் கால்களை நனைத்தது.

செங்கோல் மன்னன் அறம் திறம்பி விட்டால் அதைவிட அழிவு வேறு இல்லை என்று அறிவித்தனர்; அவலமுற்றனர்.

“கடல் கரையைக் கடக்காது; வேதம் நெறி பிறழாது; உலகம் நடுநிலைமை பிறழாது; அரசர்கள் செம்மை கெடக்கூடாது; இனி இந்த நாட்டின் நிலைமை என்ன ஆகுமோ?” என்று அஞ்சினார்கள். “யார் இனி நல்லாட்சி தரப்போகிறார்கள்” என்று பேசி வருந்தினார்கள்.

சுகவாசம் புரிந்த அவன் வனவாசம் மேற் கொண்டான். நாட்டில் வாழ இடம் இல்லாதவர்கள் காட்டுக்குச் செல்வது பழங்காலத்து மரபு; சந்நியாசிகள் மனைவாசத்துக்கு அஞ்சி இங்கே தங்கினார்கள். அது அவர்களுக்கு மலை வாசமாக விளங்கியது. இப்படித்தான் பழங்கதைகள் பேசுகின்றன. முதியோர் இல்லங்களாக அங்கு வதித்தலை அவர்கள் மேற்கொண்டனர்.