பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

புகழேந்தி நளன் கதை



அழுவதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தது. அதை நன்கு பயன்படுத்தினர். பத்திரிகைகள் தலையங்கம் தீட்டுவது போல் உள்ளக் குமுறலை அழுகையில் வெளிப்படுத்தினர்.

மாநகரே தன்னை விட்டுச் சென்றதுபோல் தோன்றியது; திரும்பிப் பார்த்தான்; வெகுதூரம் வந்துவிட்டதை அறிந்தான்.

வழியில் முள்ளும் கல்லும் அவர்களுக்குப் புதிய முயற்சியைத் தந்தது. காலில் தோல் அணிந்து நடந்தவர்கள்; தேர் தவிர அவர்கள் கால்கள் தெரு மண்ணை மிதித்தது இல்லை. கல்லும் முள்ளும் அவர்கள் கால்களை வருத்தின.

“யார் இவற்றைக் கொண்டு வந்து போட்டார்கள்?” என்று அந்தச் சிறுவர்கள் கேட்டனர்.

“ஏன் நம் நகரில் இவை தெருக்களில் இல்லை” என்றும் கேட்டனர்.

அவர்களுக்குக் கூறுவதற்கு விடை தெரியவில்லை.

“காடு என்றால் இப்படித்தான் இருக்கும்” என்றான் நளன்.

“நாம் செல்லும் வழியெல்லாம் கடந்து விட்டோமா” என்று கேட்டனர்.

அவர்களுக்கு என்ன விடை தருவது? உலகம் உருண்டை என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? தட்டை என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார்கள். துன்பம் என்பது வாழ்வின் மறுபக்கம் என்பது யாரும் அவர்களுக்கு அறிவித்தது இல்லை. பசி அவர்களை வாட்டியது. கனிகள் அவர்கள் பசியை அடக்கவில்லை.

வேளைக்குச் சோறு கண்டவர்கள் காயும் கனியும் தின்னும் புதுமை அவர்களுக்கு வியப்பு அளித்தது.