பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

77



ஆகியது. இருவர் ஒன்று ஆயினர் என்று கூறினால் அதற்கு இது ஒரு புதுவழியாயிற்று; கூறை ஒன்றை உடுத்திக் கொண்டு அந்தப் பறவையை வலை வீசிப் பிடிப்பதுபோல் மற்றைத் துகில் கொண்டு வளைத்தான். அதனைக் கூரிய அலகால் கவ்வியது; காற்றாடி எனப் பறந்தது. பறவை அதனோடு அவன் உடுத்தியிருந்த உடையும் உடன் கட்டை ஏறியது.

அழுவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை. ஏய்த்து விட்டது அந்தப் பறவை என்பதைக் கண்டனர். உயரத்தில் பறந்தது; “மகனே! யான் கலியன்; உன்னைப் பிடித்து ஆட்டும் சனியன். பார் தோற்றுவிக்கச் செய்தவனும் நான் தான். உன் உடையைப் பறித்துக் கொண்டு உன்னைப் பதற வைப்பதும் நான்தான்” என்று கூறியது.

இது கலியன் சூழ்ச்சி, அதனால் தனக்கு ஏற்பட்டது வீழ்ச்சி என்பதை அறிந்தான். என் செய்வது? அவன் தெய்வ சாதியினன். வேலியே பயிரை மேய்ந்தால் வேலிக்கு ஒரு வேலியா போட முடியும்!

வயிறு எரிந்து வாய்க்கு வந்தபடி அவனை வைது தீர்த்தாள். “நீ நரகத்துக்குத்தான் போவாய்” என்று கூறினாள். அதுவும் இந்த இந்தத் தீமை செய்பவர் நரகத்துக்குச் செல்வார்கள் என்று குறிப்பிட்டு அந்த வகையை அவன் சார்ந்தவன் என்று குறிப்பிட்டாள்.

“அறம் பிழைத்தவர்கள், பொய் கூறியவர்கள், அருளைச் சிதைத்தவர்கள், மானம் கெட்டவர்கள், தெய்வம் இகழ்ந்தவர்கள், பிறர்மனை நயந்தவர்கள் இவர்கள் புகும் நரகத்தை நீ அடைவாய்” என்று சாபம் தந்தாள்.

பிழைகள் இவை என்று எடுத்துக் கூறினாள்; கொடுமை மிக்கவை இவை என்று குறிப்பிட்டாள். இது வஞ்சகம் செய்தது; ஏய்த்தது என்று கூறினாள்.