பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

85



கேட்டாள். பதில் கிடைக்கவில்லை. நீலமலர் போன்ற அவள் கண்கள் முத்துகளை உதிர்த்தன; கண்ணிர் விட்டாள். கொடியிடையாளாகிய அவள் துவண்டாள்; மனம் மருண்டாள்.

“மன்னவனே!” என அழைத்தாள். மாற்றம் அவள் கண்டிலள்; “இஃது என்னே என்னே” என்று அங்கலாய்த்தாள்.

தரைதான் அவர்கள் படுத்த படுக்கை; அதைத் தடவிப் பார்த்தாள்; எவ்விடத்திலும் அவனைக் கண்டிலள்; ‘ஐயகோ’ என்று கதறி அழுதாள்; விழுந்தாள்; வீமன் மகள் கொடிபோல் துவண்டு விழுந்தாள்; வேடன் விடும் அம்புக்கு அலறும் மயில்போல் நாற்புறமும் ஒடினாள். அவள் கண்ணிர்த் துளிகள் அவள் காதில் அணிந்திருந்த குழைகளை நனைத்தன.

வான் மேகமும் மின்னலும் வெறும் நிலத்தில் விழுந்ததுபோல் கூந்தல் சரிய விழுந்தாள். மேகம் போன்றது கூந்தல், மின்னல்போல் விளங்கினாள் தமயந்தி.

ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று அன்றே நளன் கூறிச் சென்றான். செயலற்றுப் போகும் நிலையில் கடவுளுக்கு அழைப்பு விட்டான்; ஒரு சிலர் இந்த நாட்டைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று செயலற்றுப் பேசுவது போலத் தமயந்தியைத் தெய்வங்கள் காக்க வேண்டும் என்று முறையிட்டான்.

இந்த நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது என்றால் ஒரு பெண் நடு இரவில் தனியாகப் போக வேண்டும். அவளுக்கு எந்த வலிப்பும் யாராலும் வரக் கூடாது என்று கூறினார் தேசப்பிதா.

எந்தக் காலத்திலும் இந்தத் திருநாட்டில் பெண் தனித்துச் சென்றது இல்லை.