பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

புகழேந்தி நளன் கதை



அதில் அம்பினைத் தொடுத்தான். அந்தப் பாம்பின் மீது விடுத்தான்; அதைப் படுத்தான்; அவளை எடுத்தான்.

தப்பித்தவள் அவனுடன் பேசாமல் சென்று இருக்கலாம். அது அவன் கடமை; அவளைக் காத்தான். இவள் வாய் வைத்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை.

“அபயம் என்று அழைத்த என் உயிரை நீ காத்தாய்; உனக்கு யான் என்ன கைம்மாறு செய்வது? இதற்கு எது தந்தாலும் ஈடு ஆகாது” என்று கூறினாள். உயிரைக் காத்தவனுக்கு உயர் மொழி கூறினாள். அவன் மனம் குளிரும் என்று எதிர்பார்த்தாள். அது அவனுக்குச் சூட்டை எழுப்பியது; கிளர்ச்சியை ஊட்டியது.

“அவள் எது கேட்டாலும் தருவாள்” என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகியது. அநியாயமாக அந்த அரவு தின்று விழுங்கி இருக்கும். அவளை முழு வடிவில் அவன் காத்தான்.

ஏன் அவள் தன்னை அவனுக்கு அளிக்கக் கூடாது? அவன் அவளை விழுங்கப் போவது இல்லை. கூடி இன்புற விழைந்தான். அவள் அவனுக்குப் பழைய மொந்தைக் கள்போல் காணப்பட்டாள்.

“ஏடி என்னுடன் வாடி” என்று அழைத்தான். “மோடி கிறுக்குதடி பழைய மொந்தைக் கள்போல்” என்றான்.

“கண்ணாலம் செய்து கொண்ட பெண்ணை அண்ணா நீ கருதலாமோ” என்று அலறி அழுதாள்.

அவன் வேடுவன்; இரக்கம் என்பது அறியாதவன். வேட்கை மீதூர்ந்த நிலையில் எதுவும் கேட்கும் நிலையில் இல்லை. புறா தப்பித்துச் செல்கிறது என்பதால் அதனைத் தொடர்ந்தான்.