பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

புகழேந்தி நளன் கதை



விசனத்தை விவரமாக அறிந்தவர் சிலர். அநாதை இல்லத்தில் சேர்க்கப்படத் தக்கவள் என்று முடிவு செய்தவர் பலர். இந்த மாதிரி சரித்திரம் படைக்கும் தரித்திரர்களுக்கு என்றே கட்டப்பட்ட இல்லங்கள் அவை.

சேதி நாட்டு அரசிக்குச் சேதி எட்டியது. “பாவம் ஒரு பெண்; பார்த்தால் பசி தீரும்; எந்தப் பசி? அதற்கு விளக்கம் இல்லை. அரசமகள்போல் இருக்கிறாள். அநியாயமான அழகு அவளிடத்தில் இருக்கிறது. கட்டிக் கொண்டவள் போல் இருக்கிறாள். கன்னி என்று அவளைக் கூற முடியாது; அது கழித்தவள்; கூட்டலாகக் குழந்தைகளும் இருக்கலாம். பறி கொடுத்தவள்போல் தறி கெட்டு நிற்கிறாள்” என்று சென்று கூறினர்.

“அவள் எங்காவது போய்விடப் போகிறாள்; அவளை அழைத்துவா” என்று தன் சேடி ஒருத்தியைச் சேதி அரசி அனுப்பி வைத்தாள்.

அரசி முன் அவள் அழைத்துச் செல்லப்பட்டாள்; சென்றதும் அரசியின் அடிகள் இரண்டில் விழுந்து புரண்டு அழுதாள்.

அவளை எடுத்து நிறுத்தினாள். “கண்ணீர் துடைத்துக் கொள்” என்றாள். “உன் துயரக் கதையைக் கூறுக” என்றாள்.

விரித்துக் கூறச் சொற்கள் தேவைப்பட்டன. அவளுக்குச் சொற்கள் போதவில்லை.

கதையைச் சொன்னால் அவர்கள் படமா எடுக்கப் போகிறார்கள். செய்தி மட்டும் சொன்னால் போதும் என்று முடிவு செய்தாள்.

“என்னைத் தனியே வனத்தில் இட்டுச் சென்று விட்டான் எம் தலைவன். அவனைத் தேடிக் காணாது அலமருகின்றேன்” என்று கூறினாள்.