பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இப்படியே தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு, கவிதைக்கு அடிப்படையான சந்தம் பீறிட்டுக் கிளம்புகிறது. அவ்வாறு கிளம்பும் அந்த ஓசையிலிருந்து சொற்கள் வடிவம் பெறுகின்றன.

“பீறிட்டுக் கிளம்பும் அந்தச் சந்த ஓசை எங்கிருந்து வருகிறது என்று யாருக்குத் தெரியும்? அது எனக்குள் திரும்பத் திரும்பத் தோன்றும் ஓர் ஒலி; ஒரு தாலாட்டு; என்னுள் மீண்டும் மீண்டும் தோன்றும் ஏதோ ஒன்றுக்கு நான் கொடுக்கும் ஒலி வடிவம். அந்த ஒலிகளை முயன்று இயக்குதலும், ஒன்றைச் சுற்றி அந்த ஒலிகளை ஒழுங்குபடுத்தி அமைத்தலும், அவற்றின் இயல்பையும் பண்பையும் கண்டறிதலும்தான் கவிதையின் தொடர்ந்த உழைப்பாகும்.”

ருசியக் கவிஞர் ஸ்வெட்டேவாவும் கவிதைத் தோற்றம்பற்றி, இதே போன்ற கருத்தையே வெளியிடுகிறாள். “என் படைப்புக்கள் எல்லாமே என் கேட்கும் செயல்” என்பது அவள் கருத்து.

ஜெர்மானியக் கவிஞர்ரில்க்கின் அனுபவம் இவர்களினின்றும் சற்று மாறுபட்டது. டியூனோ கோட்டையில் ஒரு நாள் தனிமையில் அமர்ந்திருந்தபோது, தன் உள்ளத்தில் நிகழ்ந்த கவிதை ஆவேசத்தை ரில்க் கீழ்க்கண்டவாறு படர்க்கையில் பதிவு செய்கிறார்:

"இனம்புரியாத ஒன்று அவனிடம் அன்று நிகழ்ந்தது. வழக்கம்போல் ஒரு புத்தகத்தைக் கையிலேந்திய வண்ணம் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்த அவன், கவையாகப் பிரிந்திருந்த மரக்கிளையொன்றில் வசதியாக அமர்ந்து கொண்டான். மிகவும் ஓய்வாக அமர்ந்த நிலையில் கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டுச் சுற்றியிருந்த அமைதியான, அழகிய இயற்கைச் சூழ்நிலையில் தன்னை மறந்து மூழ்கினான்.

"இதற்குமுன் அனுபவித்திராத ஓர் உணர்ச்சி வெள்ளம் அவனுள் தலையாகப் பரவுவதை உணர்ந்தான். அவன் அமர்ந்திருந்த மரத்தினிடையிலிருந்து அவ்வுணர்ச்சி மெல்லிய அதிர்வுகளாக அவனுள் இறங்கியது. இது போன்ற இன்ப அதிர்ச்சியை அவன் என்றும் அனுபவித்ததில்லை, அவன் உடம்பே ஆன்மாவாகமாறி இயல்பான தன் செயல்களை மறந்து ஏதோ ஒரு பேராற்றலை தன்னுள் ஏற்றுக் கொண்டது போலிருந்தது; அதுவுமன்றி எளிதில் புலப்படாதஇயற்கையின் மறுபுறத்தைக் கண்டது போலவும் இருந்தது."

மாயகோவ்ஸ்கி அசாத்தியத் துணிச்சல்காரன். வானத்தில் ஏறிவரும் பகலவனைத் தேநீர் அருந்தக் கூப்பிடுகிறான்.