பக்கம்:புதிய பொலிவு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

வெற்றிலை கொடிக்காலிலே பூச்சி வந்துவிட்டது. சாமி! எங்களைக் காப்பாற்றவேணும் என்று போன வாரத்திலே ஒரு பத்து பேர் என்னை வந்து கேட்டார்கள், (சிரிப்பு) சிரிக்காதீர்கள். நாடு எவ்வளவு கெட்டு வருகிறது, நம்முடைய ஜனங்களுடைய புத்தி எப்படி மட்டமாகிக் கொண்டு போகிறது. என்பதை எண்ணிப் பாருங்கள். இப்படிப்பட்டவர்களைப் பற்றித்தான் நமது தேசீய மகா கவி, சுப்ரமணிய பாரதியார் 'நெஞ்சு பொறுக்கு தில்லையே ! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து நெஞ்சு பொறுக்குதில்லையே; என்று பாடினார். எனக்கு பாடத்தெரியாது. மாலையிலே அருமையாகப் பாடப்போகிறார்கள் ஸ்ரீமதி அம்மாள், கேளுங்கள். பூச்சி வந்துவிட்டது, காப்பாற்றுங்கள் என்று என்னிடம் வந்து அழுதால் நான் என்ன செய்வது? நீங்களே சொல்லுங்கள்? (மீண்டும், சிரிப்பு) பூச்சிகளை ஒன்றுவிடாமல் பிடித்து நசுக்கிப் போடவா! (பலத்த சிரிப்பு). மந்திரியின் வேலை இதுதானா?...கரும்பு காய்ந்து போகிறது, கடலைக்கொட்டை கெட்டுப் போகிறது. இரும்பு கிடைக்கவில்லை, நெசவு நடக்கவில்லை, வாழை சரிந்துவிட்டது, வரகரசி முளைக்கவில்லை, என்று எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி மூக்கால் அழுதுகொண்டிருந்தால், நாட்டிலே சந்தோஷம் எப்படி ஏற்படும்? இப்படித் தொல்லை கொடுத்தால், நாங்கள் ஆட்சியை நடத்த நேரம் எப்படிக் கிடைக்கும். (ஒரு

சீட்டு தரப்படுகிறது. அதைப் படித்து விட்டு) இதோ பார்த்தீர்களா, புதிதாக ஒரு அழுகுரல். குச்சிக் கிழங்குகளுக்கு மார்க்கட் இல்லையாம்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/20&oldid=1575591" இலிருந்து மீள்விக்கப்பட்டது