பக்கம்:புதிய பொலிவு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

மடியிலே நாலு நூறு ரூபாயுடன் டவுனில் நடமாடிய போது, வேலப்பனுக்கு எப்போதும் ஏற்படாத ஒரு தெம்பும் தைரியமும் வந்தது; கடை வீதியிலே உலவும்போது அவன் கண்களிலே நம்பிக்கை ஒளிவிடும். சின்னக் கடையாக ஆரம்பித்து, சாமர்த்தியமாக வியாபாரத்தை நடத்தித் தானே, இவர்களிலே பலர், பெரிய கடைகள் வைத்துக் கொண்டு பணம் சேர்க்க முடிந்தது. நாம் ஏன் இப்படிச் செய்யக் கூடாது? ஏன் நம்மாலே முடியாது? என்று எண்ணிக்கொள்வான். அவன் உள்ளத்தில் ஓராயிரம் யோசனைகள் தோன்றித் தோன்றி ஒன்றொடொன்று மோதுவதாலே சில நொருங்கிப்போயின, யோசனைகள் குழம்பி விட்டன; யாராவது தக்கபடி யோசனை சொன்னால் மட்டுமே நல்லது, என்று எண்ணிக்கொண்டான்.

'டவுன்' இதற்கா, ஆளை வைத்துக்கொண்டில்லை? இதையே பெரிய தொழிலாகக் கொண்டவர்களை, அவன் தெரிந்துகொண்டதில்லை—அவனாலே கண்டுபிடிக்க முடியவில்லை யானால்—இவனைக் கண்டுகொள்ளவா அவர்களால் முடியாது, முதலில் மோப்பம் பிடித்தவன், முத்தையன்—மூலைக் கடை முத்தையன்-என்பது அவனுக்குப் பட்டப் பெயர்! ஆனால், அவனுக்குக் 'கடை' கிடையாது; மூலைக் கடை, மூன்ராவுத்தருடையது; அங்கு எப்போதும் வட்டமிட்டபடி இருப்பான்; அதனால், அந்த வட்டாரத்தினர், அவனுக்கு மூலைக்கடை முத்தையன் என்று பெயரிட்டனர்.

முத்தையன் வழக்கப்படி நாலு நட்சத்திர பீடியைப் பற்றவைத்துக்கொண்டு, புது வியாபாரத் திட்டமொன்றை, மூசாராவுத்தருக்கு விளக்கிக்கொண்டிருந்தான்.

"பத்து இருக்குமேல்லோ ராவுத்தரே வருஷம் நீ இங்கே வந்து? என்ன செய்திருக்கே? இது வரையிலே! பத்துப் பவுனிலே! நகை செய்தாயே, அதுதானே..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/28&oldid=1576203" இலிருந்து மீள்விக்கப்பட்டது