பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அது நம்ம பிள்ளையவாள்தான். நான் ஒன்று பொதுவாகச் சொல்லுகிறேன். நகை மூவாயிரம், மத்தது ரெண்டாயிரம்!" என்றார்.

எல்லாரும் சற்று மௌனம்.

"அண்ணாச்சி! நீங்க ஒரேடியா மொதொண்டாதிக. பிள்ளைவாள்! நீங்க காலைத் தேச்சா பிரயோசனமில்லை. நல்ல இடம். பையனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கவர்மெண்டு வேலை. இனிசூபெக்டரு, தாசில்தாரா வரலாம் உங்க பெண்ணுக்கு ராஜயோகம்!" என்று மத்தியஸ்தம் பேசினார் நாவன்னா.

"சதி! பொறவு நீங்க சொல்லுறப்பா என்னா?" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.

"வேறெ என்ன அய்யா? இப்பவே வெத்தலை பாக்கு கைமாறிடுத்து. வர வியாழக்கிழமை நல்ல தினம். அன்னைக்கி திருமங்கிலியத்திற்குப் பொன்னுருக்கி விடுகிறது. சரிதானே பிள்ளைவாள்?" என்று ஒரு வெள்ளித் தாம்பாளத்தைச் சங்கரலிங்கம் பிள்ளையின் தர்மபத்தினியிடம் வாங்கி அந்தச் சிறு சடங்கை நடித்து முடித்தார்கள்.

சென்னையில் அன்று சாயங்காலம்.

பார்வதிநாதன் வேலை ஒப்புக்கொண்டாகிவிட்டது. தகப்பனார் கொடுத்த பணம் கொஞ்சம் கையில் ஓட்டம். சினிமாவிற்குச் சென்றான்.

இவனுக்குப் பக்கத்தில் ஒரு ஆங்கிலோ இந்திய மாது - இளநங்கை - உட்கார்ந்திருந்தாள்.

தகப்பனார் அன்று பெண் விஷயத்தைக் கேட்டதிலிருந்து அவனுக்கு ஒரு புதிய உணர்ச்சி, இயற்கையின் தேவை, அடிக்கடி மனத்தில் சுற்றிக்கொண்டே இருந்தது. பார்வதிநாதன் நல்ல பையன் தான். இதுவரை அந்த நினைப்பிற்கு அவகாசமில்லை.

ஆனால் அந்தத் தினத்திலிருந்து அவனது உடல் கட்டுக்கடங்கவில்லை.

அன்று இருவர் சினிமா பார்க்கவில்லை.

அந்த நங்கை ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் அவன் மனைவியாக இருக்கச் சம்மதித்தாள்.

இருவரும் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள்.

அந்தச் சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து, அவனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளச் சம்மதிக்கும் பொழுது, ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் சரிதானே?

மணிக்கொடி, 5.8.1934

115

ஒப்பந்தம்