பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடுக்க வேண்டாம் என்று பட்டினியால் இறந்தான் என்ற முடிவிற்கு வந்தார்கள்.

பிறகு என்ன? புதைக்கவேண்டியதுதான் பாக்கி.

எங்களூர் ஆஸ்பத்திரித் தோட்டி, இந்த மாதிரி பிணங்களைப் புதைத்துவிடுவதில் சமர்த்தன். ஒருவனே முடித்துவிடுவான். ஒற்றைக் கம்பில் பிணத்தை இறுக்கிக் கட்ட வேண்டியது - தலை சற்றுத் தொங்கினால் என்ன மானம் போய்விட்டது? மேலே மண்வெட்டியைச் சொருக வேண்டியது; விறகுக் கட்டை போல் தலையில் தூக்கிக் கொண்டு போய் புதைக்க வேண்டியது. இதுதான் அவனுக்குத் தெரியும். அதில் அவன் 'எக்ஸ்பர்ட்'.

அன்று சாயங்காலம்; அதாவது பிணத்தை அறுத்துச் சோதித்த அன்று சாயங்காலம்.

அப்பொழுது எங்களூர் கோகலே ஹாலில் 'பாரத ஜனங்களின் தற்கால நிலைமை' என்ற பிரசங்கம். ஊர் பூராவாகவும் திரண்டு இருந்தது; அதைக் கேட்க அவ்வளவு உற்சாகம். முதலிலே 'பாரத சமுதாயம் வாழ்கவே' என்ற பாட்டை ஒரு நண்பர் வெகு உருக்கமாகப் பாடினார்.

'தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை யழித்திடுவோம்' என்ற அடிகள் வந்தவுடன், என்ன உருக்கம்! என்ன கனிவு! நாங்கள் ஆனந்த பரவசத்தில் கை தட்டினோம்!

மணிக்கொடி, 12.8.1934

124

தனி ஒருவனுக்கு