பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனக்குக் கடற்கரைக்குப் போகவேண்டும் என்ற ஆசை.

மனிதனின் வெற்றியைக் கவனித்தது போதாதா?

கடற்கரைக்குச் சென்றேன்.

லேசான தென்றல், டாக்கா மஸ்லினை உடுத்திய மாதிரி மேலே தவழ்ந்தது. நல்ல காலமாக ரேடியோ முடிந்துவிட்டது.

கடற்கரையில் சற்று தூரத்தில் ஒரு பெண்ணின் கீதம். சங்கரா பரணம்; இன்பந்தான். நின்று கேட்டால் குடி முழுகிப்போகுமாமே, ஹிந்து சமூகத்திற்கு.

எனக்குத் தகுந்தவள் அந்தக் கடல்தான்.

அவளைப் பார்த்தால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் - உற்றுப் பார்த்தாலும்.

வானத்திலே சந்திரன். அவனைப் பற்றி அக்கறையில்லை. அன்று அவன் ஆதிக்கம் அதிகமில்லை. சுற்றி மேகப்படலம்; மங்கிய ஒளி.

நீலக்கடல்; அதற்குப் பெயர் அன்றுதான் தெரிந்தது. நீலக்கடல்!

நீலமா? அதிலே உயிர் ததும்பிக்கொண்டல்லவா இருந்தது!

தூரத்திலே - அடிவானத்தில் அல்ல - அதுவும் கடலும் சந்திக்கும் இடத்தில் - அவள் குறுநகை.

அலைகள் மேலெழுந்து வெள்ளை வழிகாட்டி கண்சிமிட்டலுடன் விழுந்து மறைந்தன.

அதில் என்ன பொருள்? என் மனதில் ஒரு குதூகலம்; காரணமில்லாத துக்கத்தினால். அதன் பொருள் என்ன?

என்னடீ! ஏன் அகண்ட சிருஷ்டியின் மர்மமாக - மந்திரமாக - இருக்கிறாய்? உன்னுடைய குறுநகையின் மர்மமென்ன?

நீ யார்?

ஏன் என் மனதில் இந்த துக்கம்? எனது துயரம்...?

கண்சிமிட்டி மறைகிறாயே, யாருக்கு? அதன் பொருள் என்ன?

வரவா? அடியே! உன் மனந்தான் என்ன?

பொருள் விளங்கவில்லையே! நீ யார்?

ஆம்; அறிந்து கொண்டேன்.

நீதான் என் அரசி!

என் கா...த...லி! மனித ஹ்ருதயத்தின் துக்கத்திலே பிறக்கும் கவிதை என்னும் என் தேவி!

மணிக்கொடி, 2.9.1934

142

சித்தம் போக்கு