சட்டைநாத பிள்ளைக்குப் புஸ்தகம் வாங்கப் பணம் தேவையாக இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தார். ஒரு நூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. ஒருவேளை தவறுதலாகக் கொடுத்துவிட்டோ மோவென்று பூவையாப் பிள்ளையிடம் சென்றார். கேட்டவுடன் அவர் வெகு சாந்தமாக 'இல்லையே' என்று சொன்னவுடன் வீட்டில் எங்கும் தேடினார். பணத்தைக் காணோம் என்று வீட்டில் ஒரே அமளி; களேபரம்.
ஒன்றும் தெரியவில்லை.
பாங்க் காஷியரிடம் சென்று நம்பர்களைக் குறித்துக் கொடுத்து, வந்தால் சொல்லும்படி தெரிவித்துவிட்டு வந்தார்.
அன்று சாயங்காலம் காஷியர் அவர்கள் பூவையாப் பிள்ளை செலுத்திய 600 ரூபாயில் இவர் கொடுத்த ஆறு நம்பரும் இருக்கின்றன என்று தெரிவித்துச் சென்றார்.
முதலில் சட்டைநாத பிள்ளை திடுக்கிட்டுவிட்டார். இருந்தாலும் பணத்தாசை யாரை விட்டது என்று நினைத்துக் கொண்டு வெகு கோபமாகப் பூவையாப் பிள்ளை வீட்டிற்குச் சென்றார்.
"என்ன அண்ணாச்சி? நீங்க இப்படி இருப்பிஹ என்று நினைக்கவே யில்லை. நீங்க குடுத்த அறுநூறு ரூபாயில் எனது ஆறு நம்பர்களும் இருக்கிறது என்று காஷியர் பிள்ளை இப்பத்தான் சொல்லிவிட்டுப் போனார். நீங்கள் இப்படிச் செய்யலாமா...?" என்று அடுக்கிக் கொண்டே போனார். ஸ்வரம் ஏறிக்கொண்டே போயிற்று.
பூவையாப் பிள்ளைக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அகப்பட்டுக் கொண்டோ ம். மானம் என்றெல்லாம் ஒரு நிமிஷம் மனம் கொந்தளித்தது. திடீரென்று ஒரு யோசனை; வழிபட்ட தெய்வந்தான் காப்பாற்றியது.
"சவுந்திரம் மத்தியானந்தான் அவன் கடனுக்கு நீங்க உதவி செய்ததாகக் கொடுத்துவிட்டுப் போனான். அதற்கென்ன?"
"அப்படியா, திருட்டு ராஸ்கல். சவத்துப் பயலே என்ன செய்கிறேன் பாருங்கள்! நம்ம இடையில் சண்டை உண்டாக்கிவிட்டானே" என்று இரைந்து கொண்டு வீட்டிற்கு ஓடினார்.
சவுந்திரம், 'கண்ணாணை' 'தெய்வத்தாணை' எல்லாம் பலிக்கவில்லை. வேலைபோய்விட்டது.
"நீ நாசமாய்ப் போகணும்" என்று ஒரு கைப்பிடி அள்ளிவிட்டுப் போகும்பொழுது, தான் கொடுக்கவேண்டிய, தாங்க முடியாத பாரமாகிய கடன் சுமை தெய்வச் செயலாகத் தீர்ந்துவிட்டதை எண்ணவேயில்லை. என்ன நன்றி கெட்ட உலகம்!
3
ஒரு வாரமாகிவிட்டது.
புஸ்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
146
நன்மை பயக்குமெனின்