பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணன் குழல்

ஞாயிற்றுக்கிழமை காலை.

சென்னை எழுந்துவிட்டது. அந்தப் பரபரப்பு, வேகம், அவசரம், ஆவேசம், போட்டி - அவைகளும் எழுந்துவிட்டன.

அதில் நானும் ஒருவன் தான். நூற்றில் இன்னொன்று. அந்த நாகரிக கதியின் வேகம் என்னையும் இழுத்துக்கொண்டுதான் போகிறது.

காலை.

ட்ராமின் படபடப்பு, மோட்டாரின் ஓலம்.

பந்தயக் குறிப்புடன் பத்திரிகையின் விளம்பரக் கூப்பாடு.

அங்கே.

எத்தனை பேர் ஓடுகிறார்கள்? என்ன அவசரம்!

அங்கே ஒரு பரத்தை.

அவள் பிச்சைக்காரி; இது என்ன ஏமாற்றமோ?

நொண்டிப் பிச்சைக்காரன். நல்ல வியாபாரம்.

நொண்டி கால் இல்லாவிட்டால் மனித உணர்ச்சியில் பேரம் செய்ய முடியுமா?

அதைவிட இந்த குமாஸ்தா எதில் உயர்ந்தவர்? அவன் அங்கமெல்லாம் ஒடிக்கப்பட்ட முடவன். அதற்கு மேல் அவனுக்கு இருக்கும் சுமை - அதிலே அவனுக்குக் கிடைக்கும் 30 ரூபாய், தானம் தான். இந்தச் செல்வத்தில் தனது சட்டை ஓட்டையை மறைத்துக்கொள்ள வேண்டிய கௌரவம்; அதைச் சமூகம் எதிர்பார்க்கிறது.

மறுபடியும் ட்ராமின் கணகணப்பு, மோட்டாரின் ஓலம், நாகரீகமும் அதன் சாயையும்.

வெள்ளையில் கருப்புப் புள்ளிகள்.

என் மனதிலே ஏதோ காரணமில்லாத துயரம் சோகம். ஏன்?

நானும் அந்த மனித மிருகம்தானே.

மற்றவர்களுக்கில்லாத அக்கறை எனக்கென்ன?


154

கண்ணன் குழல்