பிரயோஜனமில்லை. மகரமோ, அண்ணனுடன் கோபித்துக் கொண்டு ரிஜிஸ்தர் கலியாணத்தை நடத்திவிட்டான்.
பிறகு நடந்தது அந்தக் கோரமான சம்பவம். அவனது மரணம். போன வருஷம் உதகமண்டலத்திற்குக் கணவனும் மனைவியும் சென்றார்கள். அங்குதான்...
அதன் சிகரமான தொட்டப்பெட்டாவைப் பார்க்கச் சென்றார்கள். அந்தப் பாழடைந்த நட்சத்திரச் சாலையின் பக்கத்தில் செங்குத்தான வீழ்ச்சி ஒன்று. அதில் எட்டிப் பார்த்த பொழுது மகரம் சறுக்கி விழுந்து உயிர் துறந்தார். பிறகு ஏதோ ஒருமாதிரி சுலோசனாவிற்கும் லக்ஷ்மிகாந்தத்திற்கும் சமாதானம் ஏற்பட்டது. இருவரும் மகரத்தின் திதியில் சந்தித்தார்கள்; பிறகு ஜி.டி.யில் ஒரு தடவை எங்கோ சந்தித்தார்கள்.
இப்பொழுதுதான் முதன்முதலாக லக்ஷ்மிகாந்தத்தின் விருந்தினளாக வருகிறாள். 'லக்ஷ்மி விலாச'த்தின் பெரிய ஹாலில் சுலோசனாவின் படம் - மகரம் இறக்கும்பொழுது எழுதியது - தொங்கவிடப்பட்டிருந்தது. விருந்தினருக்கு எல்லாம் இது அதிசயமாக இருந்தது. எல்லாரும் தாழ்ந்த குரலில் இதைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார்கள். ஒருவேளை மகரத்தின் மேல் இருந்த அளவு கடந்த அன்பினால் இருக்கலாம்.
எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, "உங்களில் யாருக்காவது பேயில் நம்பிக்கை உண்டா?" என்றார் லக்ஷ்மிகாந்தம்.
"ஏன் இந்த வீட்டில் இருக்கிறதா?" என்றாள் சுலோசனாவின் கூட வந்த ஒரு பெண்.
"ஆம்! அதில்தான் சுவாரஸ்யம். என்னைப் போன்ற பிரம்மசாரிகளுக்குத் துணை யாரிருக்கிறார்கள். ஒரு பேயாவது இருக்க வேண்டாமா?" என்று சிரித்தார் லக்ஷ்மிகாந்தம்.
"இங்கே நடந்த விஷயங்களைக் கேட்டால் ரஸமாக இருக்கும். இந்த வீட்டு மெத்தையில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அந்த ஜன்னல் நீங்கள் எப்படித்தான் மூடித் தாழ்போட்டு வைத்தால் கூடத் தானே திறந்து கொள்ளும்" என்றார் மீண்டும்.
"நன்றாகப் பூட்டிவிட்டால்" என்றார் அங்கிருந்த இன்னொருவர்.
"இருபது வருஷத்திற்கு முன் இங்கே சுமதி என்ற பெண் தனது கணவனை அந்த ஜன்னல் வழியாகப் பிடித்துத் தள்ளிவிட்டாள். அன்று அவன் சூரியாஸ்தமனத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தானாம். ஒரு தள்ளு, அவ்வளவுதான், கீழே புருஷனைப் பெட்டிவைத்துத்தான் பொறுக்க வேண்டியிருந்தது" என்றார் லக்ஷ்மிகாந்தம்.
"அவளைத் தூக்குப் போட்டார்களா?" என்றார் பிரகாசம் என்ற நண்பர்.
"இல்லை, இல்லை. அதெப்படி முடியும்? ஏதோ தவறி விழுந்து விட்டதாக நினைத்தார்கள். யாரால் அதை நிரூபிக்க முடியும்? பேயைச்
176
'நானே கொன்றேன்!'