பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துன்பக் கேணி


வாசவன்பட்டி என்றால் திருநெல்வேலி ஜில்லாவாசிகளுக்குத் தெரியாது. ஜில்லாப் படத்தைத் துருவிப் பார்த்தாலும் அந்தப் பெயர் காணப்படாது; அது ஜில்லாப் படத்தின் மதிப்பிற்குக் கூடக் குறைந்த ஒரு சிறு கிராமம். ஊரைச் சுற்றிலும் பனை. பெட்ரோல் நாகரிகத்தின் ஏகாதிபத்தியம் செல்லும் ஜில்லா போர்ட் ரஸ்தாகூட, அது தன் மதிப்பிற்குக் குறைந்தது என்று நினைத்துக் கொண்டு, ஊரைவிட்டு விலகி 1/2 மைலுக்கு அப்பாலேயே செல்லுகிறது. ரஸ்தாவைவிட்டு இறங்கிக் கிழக்குப் பக்கமாக ஒரு மைல் சுமாருக்கு உடைமுள்ளும் சோற்றுக் கத்தாழையும் இரண்டு பக்கத்திலும் வளர்ந்திருக்கும் வண்டித் தடத்தில் சென்றால் ஒரு பனங்காட்டில் கொண்டுவிடும். அந்தக் காட்டில் தான்தோன்றியாகச் சென்று கொண்டிருக்கும் எந்த ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்றாலும் வாசவன்பட்டி எல்லைக்கு வந்துவிடலாம்.

ஊர் ஆரம்பித்துவிட்டது என்ற குறிப்பு என்னவெனில், பனங்காடு முடிந்து மறுபடியும் அந்த வண்டித்தடம் இரண்டு குட்டிச்சுவர்களுக்கிடையில் அற்புதமாகத் தோன்றுவதுதான். அவ்விரண்டு குட்டிச்சுவர்களும் எதிர்எதிராக இரண்டு 'நந்தவனத்தை'ச் சுற்றி வருகின்றன. தங்க அரளியும், செவ்வரளியும், முல்லையும் தறிகெட்டு வளர்ந்திருக்கும் ஒரு பிரையிடம். 'நந்தவனம்' ஒவ்வொன்றிலும் ஒரு கிணறு உண்டு.

இதைக் கடந்துவிட்டால் கிழக்கே பார்த்த கோவில், மிகவும் பாழடைந்து, மதில்கள் இடிந்து, மொட்டைக் கோபுர அலங்காரத்துடன் காணப்படும். அந்தக் கோவிலின் அர்ச்சகர் வீடு ஒன்றையும் இரண்டு மூன்று இடிந்து கூரை விழுந்த வீடுகளையுமுடைய தெருத்தான் அக்ரகாரம். அது இருபது அடிக்கப்புறம் மறுபடியும் திரும்பி, கத்தாழைச் செடி பூவரச மரங்களுக்கிடையில் சென்று, பிள்ளைமார் வீதியாக மாறுகிறது. தட்டோ டு போட்டு நாழி ஓடுகளால் சாய்ப்பு இறக்கிய பெரிய வீடுதான் பண்ணையார் நல்லகுற்றாலம் பிள்ளையின் வீடு. அதைத் தொடர்ந்த இரண்டு மூன்று வளைவுகளில்

புதுமைப்பித்தன் கதைகள்

285