பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேறுபாடுகள் வழங்கப்பட்டுள்ளன. மூலபாடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதுமைப்பித்தன் காலத்தில் நூல் வடிவம் பெறாத கதைகளுக்கு, இதழ்களில் வெளிவந்த பாடமே மூலபாடமாகக் கொள்ளப்பட்டுள்ளது; அச்சுப்பிழைகள் என மிகத் தெளிவாகத் தெரிந்தவை மட்டும் திருத்தப்பட்டுள்ளன. சந்தி, ஒருமை பன்மை முதலானவற்றில் புதுமைப்பித்தனின் பயன்பாடுகள் பேணப்பட்டுள்ளன. மிகையாக உள்ள நிறுத்தற் குறிகள் சில நீக்கப்பட்டுள்ளன. 'நிகும்பலை', 'மாயவலை' போன்ற கதைகளில் 'அன்', 'அர்' விகுதிகள் மயக்கம் தரும் வகையில் உள்ளன. இவையும் திருத்தப்படவில்லை.

பாடவேறுபாடுகள் பின்னிணைப்பு 3இல், ஒவ்வொரு கதை பற்றிய தனி ஆய்வுப் பதிவில் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதிவும், கதை முதலில் வந்த இதழ், பயன்படுத்திய புனைபெயர், நூலாக்கம் பெற்ற விவரம், மூலபாடம், பாடவேறுபாடுகள் என அனைத்துச் செய்திகளையும் வழங்குகின்றது.

இதழ்களில் வெளிவந்த கதைகள் நூலாக்கம் பெற்றபோது அச்சுப் பிழைகள் மட்டுமல்லாமல் ஒற்றுப் பிழைகளும், ஒருமை பன்மை மயக்கங்களும் கவனமாக நீக்கப்பட்டுள்ளன என்பது தெற்றெனப் புலப்படுகிறது. வாக்கியத் தொடர் அமைப்புகளும், சில சொற்களும் மாற்றப்பட்டுள்ளன. இவை பதிவுசெய்யப் பெறவில்லை. காத்திரமான மாற்றங்களே - முக்கியச் சொற்களின் சேர்க்கையும் நீக்கமும்; வாக்கியங்களின் சேர்க்கையும் நீக்கமும்; பத்திகளின் சேர்க்கையும் நீக்கமும்; தலைப்பு மாற்றங்கள் - இவையே பதிவு செய்யப்பட்டுள்ளன.

தழுவல் கதைகள்

புதுமைப்பித்தன் தழுவல் கதைகள் பற்றிய விவாதம் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. புதுமைப்பித்தனுக்குப் பிரெஞ்சு மொழி தெரியாத நிலையில், மொப்பஸான் கதைகளின் பிரெஞ்சு மூலத்தோடு அவருடைய கதைகளை ஒப்பிட, காரை கிருஷ்ணமூர்த்தி என்ற ஓர் ஆய்வாளரும், அதை வழிமொழிய சிட்டி - சிவபாதசுந்தரம் என்ற ஓர் இரட்டையரும் அமைந்த விந்தையும் நிகழ்ந்தது. புதுமைப்பித்தன் காலத்து ஆங்கில மொழியாக்கங்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டிய இந்த விவாதம், நாம் அறியாத ஓர் அயல்மொழி என்ற பூச்சாண்டியைக் காட்டி நடத்தப்பெற்று, திசைதிருப்பப் பெற்றிருக்கிறது. தழுவல் கதை எதுவும் புதுமைப்பித்தன் காலத்தில் நூலாக்கம் பெறவில்லை என்ற தார்மீக முக்கியத்துவமுடைய செய்தியும், புதுமைப்பித்தனின் படைப்பாற்றல் பற்றிய எந்த மதிப்பீடும் தழுவல் கதைகளின் அடிப்படையில் அமையவில்லை என்ற எளிய உண்மையும் விவாதச் சூட்டில் மறைக்கப்பட்டுவிட்டன்.

தழுவல் விவகாரம் பற்றிய சீரிய விவாதம் நடப்பதற்கு இதுவரை வெளியான புதுமைப்பித்தன் பதிப்புகள் போதமாட்டா என்பதோடு, ஒரு சிறுபொறி காட்டுத் தீயாக ஊதிப் பெருப்பதற்கும் அவையே காரணமாகவும் அமைந்துவிட்டன. இந்த விவாதத்தை மேற்கொண்டு தொடர்வதற்கு இந்தப் பதிப்பு அதன் பங்களிப்பைச் செய்கிறது. ஒவ்வொரு

29