பலனும் கௌரவமும் உமக்குத்தான்" என்று நிதானமாகப் பேசிக்கொண்டே மேஜை மேலிருந்த சுருட்டைக் கையில் எடுத்தார்.
"இந்த வழக்கில் உமக்கு யார் யார் மேல் சந்தேகம் எழுகிறது?" என்றார்.
"இதில் பலர் இருப்பது போலல்லவா கேட்கிறீர்கள்? மறுபடி இந்த வழக்கில் கொலையாளியைக் கண்டுபிடித்த பலனும் கௌரவமும் எனக்குத்தான் என்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே."
"அது கிடக்கட்டும். எல்லாம் தெளிவுபடுத்துகிறேன். இதில் உமக்கு யார் மேல் சந்தேகம், சொல்லும் பார்க்கலாம்."
"முதலில் சபேசய்யர் எப்படி இறந்தார் என்று தெரியவேயில்லையே!"
"ஆ! அதை மறந்துவிட்டேன். உமக்குத் தெரிந்திருக்குமென்று நினைத்தல்லவா கேட்டுவிட்டேன். சபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லை. மின்சாரத் தாக்குதலால் இறந்திருக்கிறார். அவர் பாலைக் குடித்துவிட்டுப் படுத்த மஞ்சத்தில்..."
"நிஜமாகவா? எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? மஞ்சத்தில் என்ன இருந்தது?"
"நான் சொல்லும்போதே இடைமறித்து அதையே கேட்கிறீரே? கொஞ்சம் நிதானமாகக் கேளும். சொல்லுகிறேன். முதலில் உமக்கு இதன் சம்பந்தமாக யார் யார் மேல் சந்தேகம் என்று சொல்லும் பார்க்கலாம்."
"ஏன்? லீலாவதி வேஷம் போட்ட குற்றாலம்பிள்ளை, வேலைக்காரன் நடேசன், ஸ்டேஜ் மானேஜர் ராமானுஜம்... இவர்கள் மேல்தான் சந்தேகத்திற்கு இடமிருக்கிறது."
"முக்கியமான ஆளை மாத்திரம் விட்டுவிட்டுச் சொல்லுகிறீரே!"
"எனக்கு விளங்கவில்லையே! இதுவரையில் நமக்குத் தெரிந்துள்ள தகவல்களிலிருந்து இவர்கள் மேல்தான் சந்தேகிக்க இடம் ஏற்பட்டிருக்கிறது."
"இவர்களில் யாருமில்லை கொலையாளி."
"பின் யாரய்யா?" என்று பொறுமையை இழந்து கேட்டேன்.
"நீர்தான்!" என்றார் டாக்டர் நிதானமாக. அதைக் கேட்டவுடன் நான் திடுக்கிட்டுவிட்டேன். டாக்டர் சம்பத் என்னையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். என் உடல் நிலைகொள்ளாமல் தத்தளித்தது. முகத்தில் வியர்வையரும்பியதை என் உணர்ச்சிகளுக்கு மேல் உணர்ந்தேன்.
டாக்டர் சம்பத் தமது வார்த்தைகளின் பலனைக் கவனிப்பவர் போலக் கொஞ்ச நேரம் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, "எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லிக் கடைசியில் ஒரு யோச-
316
டாக்டர் சம்பத்