பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துரை உதவியால் புரோட்டஸ்டாண்ட் கல்லூரியில் ஓர் உபாத்தியாயர் உத்தியோகத்தை வாங்கிக் கொடுப்பது என்றும் பேசி முடிந்தது.

கிட்டு, தன் வாழ்க்கைப் பிரச்னைகள் இவ்வளவு எளிதாக, இனிமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆகையால் இதில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. மேலும் எவ்வளவு நாஸுக்காக நாகரிகமாக இருக்கிறது என்பதில் மிகுந்த குதூகலம். இந்த இரகசியத்தை அவனுடன் பகிர்ந்துகொள்ள ஜயாவே போதும் என்று பட்டது. போகும்போதெல்லாம் காப்பி அருந்தப் பழக்கிக் கொண்டான். ஜயா சாமர்த்தியசாலியாகையாலும், கிட்டுவின் காதலுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்யக்கூடியவளாகையாலும் மாமிச உணவுகளைப் பற்றி வாசனைகூடப் படாமல் ஜாக்கிரதையாக இருந்து வந்தாள்.

பரீட்சையும் வந்து சென்றது. அதுவரையில் தன்னுடைய இரகசியத்தைக் கிட்டு வெகு ஜாக்கிரதையுடன் காத்துவந்தான். அவனுக்குத் தன் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அங்கு இருண்டு சிதைந்து கிடக்கும் தரித்திரக் கோலம், அவனது மனசில் தாயின் மீதும் ஒரு வெறுப்பைத் தோற்றுவித்தது.

ஒரு நாள் காலையில் அவன் குளத்தைவிட்டுச் சென்றவன் திரும்பி வரவில்லை. போகும்பொழுது, "அம்மா? கொஞ்சம் தீர்த்தம் தா?" என்று வாங்கிச் சாப்பிட்டுவிட்டுச் சென்றவன் தான்.

அன்று மத்தியானம் கிட்டு, கிறிஸ்தப்பர் கிருஷ்ணமூர்த்தியாகி, ரெவரண்ட் பீட்டர்ஸனின் முன்பு, ஜயாவுக்குத் தன் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்துக்கொள்ளும் உரிமையைக் கொடுத்தான். திருமணம் மிகச் சுருக்கமாக இரண்டு மூன்று சகரியாஸ் நாடாரின் நண்பர்களுடன் நடந்தபின் தம்பதிகள் திரும்பினர்.

அன்று பாளையங்கோட்டைச் சந்தைக்குச் சென்றிருந்த சாமண்ணா இந்தச் செய்தியைத் தலைதெறிக்க ஓடிவந்து அம்பிக்கும் அவன் தாய்க்கும் அறிவித்தார். மீனாக்ஷியம்மாளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சாமண்ணாவிற்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்ற சந்தேகம் தொடர்ந்து தோன்றிற்று. "அம்பி, எதுக்கும் நீ போய்ப் பார்த்துவிட்டு வா!" என்று அனுப்பினாள். அவளால் அதை நம்ப முடியவில்லை. கிட்டு அப்படிச் செய்வான் என்று அவள் மனம் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றது.

அம்பியை இந்தச் செய்தி திடுக்கிடச் செய்தது. ஆனாலும் அவனுக்கு இப்படி நடக்கக்கூடும் என்று முன்பே பட்டது. முன் சம்பவங்கள், அது நடக்கக் கூடியதுதான் என்றாலும் கிட்டு அவ்வளவு அசடன் என்று அம்பி எதிர்பார்க்கவில்லை.

நேரே தான் படிக்கும் கலாசாலைக்குச் சென்று ஞானப்பிரகாசம் சாமியாரின் அறைக்குள் நேராகச் சென்றான். சாமியாருக்குக் கிட்டுவின் மீது பரமகோபம். தம் வலைக்குத் தப்பிப் புரோட்டஸ்டாண்ட் மதத்தைத் தழுவியதில் அடங்காத சீற்றம். அவரால் அதை மன்னிக்-

புதுமைப்பித்தன் கதைகள்

347